அரசியல் களமாகிறதா பிக்பாஸ் வீடு? ஜூலியானாவிடம் வம்பு செய்யும் "குண்டு" ஆர்த்தி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு போராளி ஜூலியானாவை சர்ச்சையில் இழுத்துவிடும் நோக்கில் ஆர்த்தியும், காயத்ரி ரகுராமும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஜூலியானாவிடம் ஆர்த்தியும், காயத்ரியும் சர்ச்சைக்குரிய கேள்விகளை கேட்பதால் அரசியல் களமாகிறதா என்று பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பல மொழிகளில் சூப்பர் டூப்பர் ஹிட்டான பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் டிவி தமிழுக்கு கொண்டு வந்தது. அதை நடத்தும் பொறுப்பு நடிகர் கமலஹாசனுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டுக்குள் தங்க வைக்கப்பட்டு இவர்களை சுற்றி 30 கேமராக்கள் கண்காணித்து வரும். இதில் சர்ச்சைக்குரிய காட்சிகள் மட்டும் அன்றாடம் இரவு 9 மணி முதல் 10 மணி வரை விஜய் டிவியில் ஒளிபரப்பப்படுகிறது.
முதல் நாளே சர்ச்சை
கடந்த 25-ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. அன்று இந்த 15 போட்டியாளர்களும் வெளியுலக தொடர்பிலிருந்து துண்டிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினமே காயத்ரி ரகுராமின் டுவிட்டர் கணக்கிலிருந்து பதிவு சென்றுள்ளது. அதேபோல் கணேஷிம் அவரது மனைவியை மிஸ் பன்னுவதாக டுவீட்டியுள்ளார். இதனால் சர்ச்சை கிளம்பியுள்ளது.
ஜல்லிக்கட்டு ஜூலி
இரண்டாவது நாள் எபிசோடில் ஜூலியானா, நடிகர் ஸ்ரீயிடம் தன்னை கட்டிப் பிடிக்க ஆளில்லை என வருத்தம் தெரிவித்து தன்னுடன் அவராவது நிலைத்து இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதனால் தமிழகமே அதிர்ந்துள்ளது. போராளியாக பார்த்த ஒரு பெண் இவ்வாறு நடந்து கொள்கிறாரே என்று மக்கள் முணுமுணுக்க ஆரம்பித்து விட்டனர். மேலும் இணையத்திலும் ஜூலியும் பிக்பாஸும்தான் ஹாட் டாபிக்.
ஜூலியிடம் சரமாரி கேள்வி
இன்று 3 -ஆவது நாள் ஒளிபரப்படுவது என்ன என்பது குறித்து விஜய் டிவி ப்ரோமோ வெளியிட்டுள்ளது. அதில் சமையலறையில் ஆர்த்தி, காயத்ரி, ஜூலி, நமீதா, ஆரார் ஆகியோர் இருந்தனர். அப்போது ஜூலியை ஆராருக்கு அறிமுகப்படுத்தும் பொறுப்பை ஆர்த்தியும், காயத்ரியும் ஏற்றுக் கொண்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன் மெரீனாவில் நடந்த போராட்டத்தின் போது போலீஸ் தடியடி நடத்தியதற்கு காரணமே இவங்கதான் என்று ஜூலியை ஆர்த்தியும், காயத்ரியும் கைகாட்டுகின்றனர்.
3 தலைகள்தான்
அப்போது ஜூலியோ தான் திட்டியது மூன்று தலைவர்களைதான் என்றார். அதற்கு ஆர்த்தி தனிப்பட்ட முறையில் ஒருவரது பெயரை குறிப்பிட்டு பாயின்ட் அவுட் செய்தீர்கள் என்றார. அதற்கு அந்த பெண்ணோ பாயின்ட் அவுட் செய்வதில் என்ன தவறு என்று கேட்கிறார். இப்படியே போன பேச்சில், ஜல்லிக்கட்டுக்கான போராளி என்றால் ஜல்லிக்கட்டுக்காக மட்டும்தான் போராட வேண்டும் என்று காயத்ரி கண்டிப்புடன் கூறினார். உடனே ஆர்த்தி ஏன் விவசாயிகளுக்காக போராட வில்லையே என்றார். அதற்கு ஜூலி, எனக்கு ஆசைதான் ஆனால்... என்று பதில் சொல்வதற்குள் முந்தி கொள்ளும் ஆர்த்தி விவசாயிகள் போராட்டத்தின்போது ஏன் டைம் இல்லையா என்று நக்கலாக கேட்கிறார்.
போராளினு கூறாதீர்?
ஜூலியிடம், அப்போ நீங்க போராளினு கூறவே கூடாது என்றார் காயத்ரி. அதற்கு அவரு்ம நான் அப்படி கூறிகொள்வதே இல்லையே என்றார். அத்துடன் ப்ரோமோ காட்சிகள் முடிந்தன. இப்போது பாயின்ட் என்னவென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் பேசவேண்டிய கட்டாயம் என்ன. அதுவும் ஜூலியை ஆர்த்தியும், காயத்ரியும் சேர்ந்து கொண்டு வறுத்தெடுக்க வேண்டிய அவசியம் என்ன.
ஜல்லிக்கட்டு போராட்டம்
ஜல்லிக்கட்டுக்காக கோடிக்கணக்கானோர் போராடியபோது மத்திய அரசும், மாநில அரசின் செயல்பாடுகளும் எப்படி இருந்தது என்று அனைவருக்கும் தெரியும். பிரச்சினை முற்றும் வரை விட்டுவிட்டு அடிதடி நடத்தி, சட்டசபையில் அவசர சட்டம் கொண்டு வந்ததெல்லாம் அனைவரும் அறிவர். அதேபோல் அந்த போராட்டத்தின் போது வறுத்தெடுக்கப்பட்டவர்கள் மோடி, சசிகலா, ஓபிஎஸ்.
ஆர்த்தி அதிமுக
அதிமுகவைச் சேர்ந்தவர் ஆர்த்தி, பாஜகவைச் சேர்ந்தவர் காயத்ரி ரகுராம். இவர்கள் இருவரும் இவர்களது கட்சியை போலவே கடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது போராட்டக்காரர்களுக்கு எதிராக வாய்திறக்காமல் இருந்தனர். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி கிடைத்தவுடன் இதுதான் சாக்கென்று ஜூலியிடம் சரமாரி கேள்விகள் எழுப்புவதை பார்த்தால் தங்கள் தலைமையை ஜூலி விமர்சனம் செய்ததற்கு பதிலடி கொடுப்பது போன்ற சலசலப்பை ஏற்படுத்துகிறது.