ஜூலி நடிகையாகிறார்!
வெறும் 30 நாள்களில் ரசிகர்களின் அதிருப்திக்குள்ளாகினாலும் குறுகிய காலத்தில் பிரபலமடைந்த ஜூலியை கதாநாயகியாக கொண்டு ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாக கூல் சுரேஷ் தெரிவித்தார்.
சென்னை: முதன்முதலாக தான் தயாரிக்கும் படத்துக்கு ஜூலியை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யவுள்ளதாக கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது மத்திய மாநில அரசுகளை விமர்சித்து அனைத்து மீடியாக்களையும் தன் பக்கம் திருப்பியவர் ஜூலியானா. இதைத் தொடர்ந்து அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க விஜய் டிவி வாய்ப்பு தந்தது.
ஆரம்பத்தில் ஜூலியை காயத்ரியும், ஆரத்தியும் வறுத்தெடுத்தபோது பார்வையாளர்களுக்கு அவர்கள் மீது கடுப்பை ஏற்படுத்தியது. இன்னு்ம சொல்ல போனால் ஜூலியால் தான் டிஆர்பி ரேட்டே எகிறியது என்றே கூறலாம். அந்த அளவுக்கு ஜூலி ஆதரவு இருந்தது.
நிலைமை தலை கீழ்
ஆனால் தற்போதோ நிலைமை தலைகீழ் ஆகிவிட்டது. தான் முதல்முதலாக கேமரா முன்தோன்றியுள்ளதாக கூறிய நிலையில் அவர் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் குறும்படங்களில் நடித்துள்ளது வெட்ட வெளிச்சமாகியதால் அவரது பொய் தகவலும் அம்பலமானது.
சினிமா வாய்ப்பு தேடி
ஜூலியின் புளுகுமூட்டை அவிழ்க்கப்பட்டதை தொடர்ந்தும், அவரது முகத்திரையை கமல் கிழித்தெறிந்ததை அடுத்தும் அவர் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. இதனால் ஓவியாவை சீண்டி வரும் ஜூலியை நெட்டிசன்கள் தினமும் வறுத்தெடுக்கின்றனர்.
சினிமா வாய்ப்பு
பிக்பாஸ் நிகழ்ச்சி மொத்தம் 100 நாள்கள் நடைபெறும் நிலையில் தற்போது 33 நாள்கள் கடந்து விட்டன. ஜூலி எதிர்பார்த்த மாதிரியே அவருக்கு 67 நாள்களுக்கு பிறகு சினிமாவில் அவருக்கு வாய்ப்பு வழங்க அறிமுக தயாரிப்பாளரும், நடிகருமான கூல் சுரேஷ் காத்துக் கொண்டிருக்கிறார்.
பேஸ்புக்கில் தகவல்
இதுகுறித்து கூல் சுரேஷ் கூறுகையில், நான் நேசிக்கும் சினிமாவில் முதல்முறையாக நான் தயாரிப்பாளராகிறேன். என்னுடைய படத்தில் ஹன்சிகா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரை காட்டிலும் குறுகிய காலத்தில் புகழ்பெற்றவர் ஜூலி. சகோதரி ஜூலியை கதாநாயகியாக அறிமுகப்படுத்தவுள்ளோம். கதாநாயகனாக புதுமுகம் ஒருவர் நடிப்பார்.
இயக்குநர்
வெற்றி பட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சரவணன் இந்த படத்தை இயக்குகிறார். மற்ற கதாபாத்திரங்களுக்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
குடும்ப பாங்கான கதை
இது ஒரு குடும்ப பாங்கான கதை என்பதால் ஜூலியை தேர்ந்தெடுக்க நானும் இயக்குநரும் முடிவு செய்துள்ளோம். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் அவர் வெளியே வந்ததும் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். பின்னர் விரைவில் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கப்படும். உங்களுடயை ஒத்துழைப்பு எங்கள் படத்துக்கு தேவை என்றார் அவர்.