பரபரப்பாகும் பிக்பாஸ்.. வெளியேற்றப்படுகிறாரா ஜூலி?
சென்னை: பல மொழி டிவி சேனல்களில் வெற்றி பெற்ற, பிக்பாஸ் நிகழ்ச்சி, இப்போது தமிழுக்கு அறிமுகம் ஆகியுள்ளது. தமிழில் நடிகர் கமல்ஹாசன், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
நிகழ்ச்சியினர் ஏற்பாடு செய்து கொடுத்துள்ள ஒரு பெரிய வீட்டுக்குள் 15 போட்டியாளர்கள் 100 நாட்களுக்கு வசிக்க வேண்டும் என்பது விதிமுறை.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் 15 போட்டியாளர்களுக்கும் பல்வேறு நிபந்தனைகள், விதிமுறைகள் உள்ளன.
கண்காணிப்பு
போட்டியாளர்களை மொத்தம் 30 சிசிடிவி காமிராக்கள் கண்காணித்தபடியே இருக்கும். தினமும் இரவு 9 மணி முதல் 10 மணிவரை விஜய் டிவி இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது. அன்றைய தினம் நடந்தவற்றில் முக்கியமானவற்றை தொகுத்து அந்த நேரத்தில் காண்பிக்கிறார்கள்.
தலைவர்
நேற்றைய முதல் நாள் எபிசோடில், 15 பேருக்குமான ஒரு தலைவரை தேர்ந்தெடுக்கும் நிகழ்வுகள் காட்டப்பட்டன. பெரும்பாலான பங்கேற்பாளர்கள் கவிஞர் சினேகனை தங்கள் தலைவராக தேர்ந்தெடுத்தனர். அவரும் அதை ஏற்றுக்கொண்டார்.
சூடுபிடிக்கிறது
இதையடுத்து பிக்பாஸ் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. எப்படி தலைவரை அனைவரும் கூடி தேர்ந்தெடுத்தார்களோ அதேபோல முதலில் வெளியேறப்போவது யார் என்பதையும் அனைவரும் கூடி முடிவெடுத்து 'நாமினேட்' செய்ய வேண்டுமாம்.
ஜூலி
இன்று அந்த நாமினேஷன் ரவுண்ட் நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயர்களை சொல்கிறார்கள். அதிக பங்கேற்பாளர்கள் ஜூலி என்ற பெயரை உச்சரித்துள்ளனர். விஜய் டிவி ஷேர் செய்துள்ள ஒரு குட்டி புரமோஷன் வீடியோவில் இந்த காட்சிகள் இடம் பிடித்துள்ளன.
மோதல்
ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் புகழ் பெற்றவர் ஜூலியானா என்ற ஜூலி. செவிலியரான இவர், பிக்பாசில் பங்கேற்றுள்ளார். சக பங்கேற்பாளர் நடிகை ஆர்த்திக்கும் இவருக்கும், படுக்கையை தேர்வு செய்வதில் இருந்து ஆரம்பித்து முட்டல், மோதல்தான்.
எதிர்பார்ப்பு
இந்த நிலையில், செவிலியர் வேலையை விட்டுவிட்டு நேரப்போக்கிற்காக, ஜூலி இங்கு வந்துள்ளார் என ஆர்த்தி கூறும் காட்சிகள் வீடியோவில் உள்ளது. இதனால் இன்று யாரை வெளியேற்றப்போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.