தமிழ்த்தாய் வாழ்த்தை கேவலப்படுத்திய பிக்பாஸ் டீம்... வாய்பொத்தி வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு
தமிழ்த் தாய் வாழ்த்தை கேவலப்படுத்திய 'தமிழ் பிக்பாஸ்' நிகழ்ச்சியை தமிழக அரசோ தமிழக அரசியல் கட்சியினரோ கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்தை ஆளாளுக்கு கேவலப்படுத்தியதை தமிழக அரசோ அல்லது தமிழக அரசியல் கட்சிகளோ, தமிழ் அமைப்புகளோ ஏன் இதுவரை கண்டிக்கவில்லை என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பிரபலமாகியது. இதைத் தொடர்ந்து முதல் முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழுக்கு விஜய் டிவி அறிமுகப்படுத்தியது.
மொத்தம் 15 போட்டியாளர்களை வெளியுலக தொடர்பே இல்லாமல் ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டு பொறுமை, சகிப்புத் தன்மை ஆகியவற்றில் சிறந்து விளங்கி கடைசி வரை பிக்பாஸ் வீட்டில் இருப்பவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவர்.
கமல்ஹாசன்
இந்த நிகழ்ச்சியை தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த மாதம் 27-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இன்று 11-ஆவது நாளில் அடியெடுத்து வைக்கிறது. நிகழ்ச்சி ஆரம்பம் முதலே பல்வேறு சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் நடந்து வருகிறது. மெகா சீரியல் போல் தினம் ஒருவர் அழுவதும் வில்லத்தனம் செய்வதுமாக இருந்து வருகிறது. இதில் ஸ்ரீ உடல்நலக்குறைவால் வெளியேறிவிட்டார். அனுயாவை நிகழ்ச்சியிலிருந்து நீக்கி விட்டனர்.
நேற்று பள்ளி செட்அப்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10-ஆவது நாளான நேற்று ஒரு இலக்கு கொடுக்கப்பட்டது. அதில் பள்ளி போன்று உருவாக்கப்பட்ட ஒரு அறையில், பங்கேற்பாளர்கள், தமிழ்த்தாய் வாழ்த்தை பார்க்காமல் பாடுவது என்பதுதான் அந்த இலக்கு. இதனால் பள்ளி போன்று மேஜை, கரும்பலகை ஆகியன வைக்கப்பட்டு, 12 பேர் அமர்ந்திருந்தனர். பிக்பாஸ் பங்கேற்பாளர்களின் தலைவரான, சினேகன் வாத்தியார் போல் அவர்களுக்கு பாடம் எடுக்கும் வேலையை பார்த்தார். அப்போது தமிழ்த்தாய் வாழ்த்தை ஒரு முறை அனைவருக்கும் பாடிக் காட்டினார். அதைத் தொடர்ந்து அந்த தமிழ் தாய் வாழ்த்து அடங்கிய நகல் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.
நமீதா கொட்டாவி
தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது நமீதா கொட்டாவி விடுகிறார். சற்று நேரத்துக்கு பின்னர் பெஞ்சில் படுத்துக் கொள்கிறார். பாத்திரத்தை சரியாக கழுவாதவர்களை கண்டிக்கும் சினேகனோ, தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த, நமீதாவின் செயலை கண்டிக்கவில்லை. தமிழ் பேசும் விஜய் டிவி நேயர்களுக்கே நமீதாவின் செயல் அருவெறுப்பை ஏற்படுத்தும் நிலையில் தமிழ் அறிஞர் சினேகனுக்கு இல்லாதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. நமீதா அவர்களே, கழிவறையை எப்படி வைத்திருக்க வேண்டும் என்று டெமோ காண்பித்தால் போதுமா?, எந்த மொழியாக இருந்தாலும் அவரவர் உணர்வுக்கு மதிப்பு தர வேண்டும் என்று அடிப்படை அறிவு கூட இல்லையே. எல்கேஜி பிள்ளைகள் போல் கொட்டாவி விடுவதா? என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?
முதலில் சக்தி
முதலில் சக்தியை பாட அழைத்தார். அவர் சிறப்பாக தமிழ்த்தாய் வாழ்த்தை பாடினார். பின்னர் காயத்ரி ரகுராம். சம்ஸ்கிருத பள்ளியில் படித்ததாலும் அவரும் சிறப்பாகவே பாடிவிட்டார். பின்னர் கஞ்சா கருப்பு, வையாபுரி என அனைவரும் அவர்களால் இயன்ற அளவுக்கு பாடிவிட்டனர். ஆனா ஜூலியானா பாடினார் பாருங்க.
செம பில்டப்
தமிழ் தாய் வாழ்த்து பாடுவதற்கு வந்த ஜூலி தான் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படித்தாலும் தனக்கு இந்த பாடலை சிறப்பாக சொல்லி கொடுத்த பள்ளிக்கு நன்றி சொல்லி கொள்வதாக கூறி பாட ஆரம்பித்தார். அதற்கு முன்னர் தமிழ் தாய் வாழ்த்தை எழுதியவர் தாயுமானவர் என்றார். தமிழ்த் தாய் வாழ்த்தை எழுதியவர் மனோன்மணியம் சுந்தரம் ஆவார். ஆனால் ஜூலியோ தனக்கு எல்லாம் தெரிந்தது போல் காட்டி கொள்ள தேவையில்லாததை கூறி சிக்கலில் மாட்டிக் கொண்டார். இதனால் நிகழ்ச்சி பார்த்தவர்கள் கடும் கடுப்பாகி விட்டனர்.
சினேகனுக்கும் தெரியாதா?
தமிழ்த் தாய் வாழ்த்து எழுதியவர் தாயுமானவர் என்று ஜூலி கூறியபோது அதை சினேகன் திருத்தவே இல்லை. ஒரு வேளை சினேகனுக்கும் தெரியாதா என்று பொதுமக்கள் நக்கலடித்துள்ளனர். நிகழ்ச்சியில் கலந்து கொள்வோர் தமிழ் பேச வேண்டும், இதுபோன்ற சிக்கல் வரக் கூடாது என்றுதானே பாடலாசிரியரும் கவிஞருமான சினேகனை நிகழ்ச்சியில் இணைத்தனர். ஆனால் அவரே இப்படி தவறை திருத்தாமல் இருப்பது சரியா? பல்வேறு விருதுகளை வாங்கிய கவிஞரும் இவ்வாறு இருப்பதா? தமிழ் படித்து தானே கவிஞரானீர்கள் என்று மக்கள் வறுத்தெடுக்கின்றனர்.
ஜூலிக்கு இது தேவையா?
தேவையில்லாமல் பிரபலமடைய வேண்டும் என்பதற்காகவே இதுபோன்று காரியங்களில் ஈடுபட்டு ஜூலி மூக்கறுபடுகிறார். ஒரு தமிழ்த் தாய் வாழ்த்தை பாடுவதில் ஏன் இத்தனை அலட்சியம். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழ் உணர்வு என்றெல்லாம் கூறிய ஜூலிக்கு அடிப்படையே தெரியவில்லையே. தமிழ்த் தாய் வாழ்த்தை எழுதியவர் யார் என்று யாராவது உங்களை கேட்டார்களாம்மா. நன்கு தெரிந்ததை மட்டுமே பொது இடங்களில் கூற வேண்டும். லட்சக்கணக்கானோர் பார்க்கும் இந்த நிகழ்ச்சியில் வாய்க்கு வந்தபடி உளறுவதா? நிகழ்ச்சி என்றாலும், அதற்கென்று ஒரு வறைமுறையே இல்லையா?
தேசிய கீதம்
தியேட்டர்களில் தேசிய கீதம் பாடப்படும் போது எழுந்து நிற்காவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. தேசிய கீதம் பாடினால் எத்தகைய தேசப்பற்று இருக்குமோ, அத்தகைய அளவுக்கு தமிழ் தாய் வாழ்த்து பாடினால் தமிழ் உணர்வு ஏற்படும். ஒரு டிவி நிகழ்ச்சியில் இதுபோல் தமிழ் தாய் வாழ்த்தை அசிங்கப்படுத்தியபோதிலும், தமிழக அரசு ஒரு கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. வழக்கம் போல் நமக்கென்ன வந்தது என்று வேடிக்கை பார்த்து வருகிறது.
தமிழக அரசியல் கட்சிகள்
தமிழக அரசியல் கட்சிகளும், தமிழ் அறிஞர்களும் எந்த கோபதாபத்தையும் காட்டவில்லை. உப்பு சப்பில்லாத விஷயத்துக்கெல்லாம் கண்டனம் தெரிவிக்கும் இவர்களின் தமிழ் உணர்வு காற்றில் பறந்துவிட்டதா? தமிழ் தாய் வாழ்த்து என்பது, கேலி பொருளாகிவிட்டது. அனைத்து பள்ளிகளிலும் தமிழ் தாய் வாழ்த்து என்பது பிரதானம். அவ்வாறிருக்க இவர்கள் நேற்று அடித்த கூத்து கோபத்தை தூண்டுவதாக மாறிவிட்டது. வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பிக்பாஸ் வீட்டில் ஒரு வாரத்தில் நடந்தது என்ன என்பதை பார்க்க வரும் பரமக்குடிகாரராவது இதை கண்டிப்பாரா என்று பார்ப்போம்.