சூப்பர் சூனியர், ஜூனியருடன் திருவள்ளூர் களத்தில் அதிமுக... வேட்பாளர்கள் பயோடேட்டா
பாஸ்கரன்
திருவள்ளூர் தொகுதி அதிமுக வேட்பாளராக அ.பாஸ்கரன் (வயது 48) நிறுத்தப்பட்டுள்ளார். முதல்வர் பாதுகாப்புப் பிரிவில் கமாண்டோ வீரராக இருந்த இவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு 2001-இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திருவள்ளூர் நகராட்சி 7-வது வார்டில் போட்டியிட்டு நகர்மன்ற உறுப்பினரானார். 2006-2011-இல் 7-வது வார்டு பெண்கள் வார்டாக மாறியபோது அவரது மனைவி தீபா பாஸ்கரன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து 2011 தேர்தலில் அதே வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று, இன்று வரை திருவள்ளூர் நகர்மன்றத் தலைவராக பதவி வகித்து வருகிறார். அதிமுகவில் திருவள்ளூர் தொகுதி இணைச் செயலாளர்.
பி.எம்.நரசிம்மன்
திருத்தணி தொகுதி அதிமுக வேட்பாளராக பி.எம். நரசிம்மன் (வயது 62) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். 1980, 1984, 2001 ஆகிய முன்று முறை பள்ளிப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ.வாக வென்றவர். 2001 முதல் 2006 வரை தமிழக அரசின் கொறடாவாக பதவி வகித்தார். 2014-ஆம் ஆண்டு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக 3 மாதங்கள் பதவி வகித்தார். 1990 முதல் ஆர்.கே.பேட்டை ஒன்றிய அதிமுக செயலாளராக தொடர்ந்து 26 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார்.
டி.தட்சிணாமூர்த்தி
மாதவரம் தொகுதி அதிமுக வேட்பாளராக டி. தட்சிணாமூர்த்தி (வயது 41) நிறுத்தப்பட்டுள்ளார். இவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். தற்போது திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக கழக துணை செயலாளர், சென்னை மாநகராட்சி 30-வது வார்டு கவுன்சிலர்.
கே.எஸ்.விஜயகுமார்
கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளராக கே.எஸ். விஜயகுமார் (வயது 46) நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கம்மா நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். 2005 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வென்று எம்எல்ஏவானர்.
பலராமன்
பொன்னேரி தொகுதி அதிமுக வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ. பி. பலராமன் (வயது 55) அறிவிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக உள்ளார்.
வி.அலெக்ஸாண்டர்
அம்பத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளராக வி. அலெக்ஸாண்டர் நிறுத்தப்பட்டுள்ளார். இவரது சொந்த ஊர் மதுரை உசிலம்பட்டி. அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.
பெஞ்சமின்
மதுரவாயல்(தனி) தொகுதி அதிமுக வேட்பாளராக பெஞ்சமின் (வயது 47) அறிவிக்கப்பட்டுள்ளார். 1988 முதல் 1990 வரை அயனம்பாக்கம் கிளைச் செயலாளராகவும், 2002 முதல் 2015 வரை வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளராகவும் இருந்துள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி 145-வது வார்டு மாமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற இவர், தற்போது வரை சென்னை மாநகராட்சியின் துணை மேயராக பதவி வகித்து வருகிறார்.
ஏழுமலை
பூந்தமல்லி (தனி) தொகுதி அதிமுக வேட்பாளராக ஏழுமலை (வயது 52) நிறுத்தப்பட்டுள்ளார். 1984 முதல் அதிமுக உறுப்பினர். தற்போது பூந்தமல்லி தொகுதி செயலாளராக பணியாற்றி வருகிறார்.
மாபா க.பாண்டியராஜன்
ஆவடி தொகுதி அதிமுக வேட்பாளராக தேமுதிகவில் இருந்து வந்த மாபா பாண்டியராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராகி வெற்றி பெற்றவர். பிறகு அதிமுகவில் சேர்ந்தார்.