பீகார் பாணியில் எந்த நேரத்திலும் புதுவையிலும் ஆட்சி மாற்றம்? அன்றே சொன்னது ஒன் இந்தியா!
பீகார் பாணியில் எந்த நேரத்திலும் புதுவையிலும் ஆட்சி மாற்றம் நிகழலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுச்சேரி: பீகாரைப் போல எந்த நேரத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்பதால் புதுச்சேரியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுவையில் காங்கிரஸ்- திமுக கூட்டணி ஆட்சியில் இருந்து வருகிறது. மொத்தம் 17 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் முதல்வராக நாராயணசாமி இருந்து வருகிறார்.
அன்றே சொன்ன ஒன் இந்தியா
பல மாநிலங்களில் கையாண்டு கொல்லைப்புறமாக ஆட்சியைக் கைப்பற்றுவது போல புதுவையிலும் என்.ஆர். காங்கிரஸ்- அதிமுக உதவியுடன் அதிகாரத்தை கைப்பற்ற பாஜக முயற்சித்து வருகிறது. இதனை அண்மையில் நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளம் பதிவு செய்திருந்தது.
பீகார் ஆட்சி மாற்றம்
என்.ஆர். காங்கிரஸ்- அதிமுகவுக்கு மொத்தம் 12 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். புதுவை காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தலைமையில் 4 எம்.எல்.ஏக்கள் இந்த அணியுடன் கை கோர்த்தாலே பாஜகவின் பினாமி ஆட்சி அமைந்துவிடும் என அச்செய்தியில் நாம் பதிவு செய்திருந்தோம். இந்த நிலையில் பீகாரில் நிதிஷ்குமார் நேற்று ராஜினாமா செய்து புதிய அரசு உருவாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.
ரெங்கசாமி- அமித்ஷா ஆலோசனை
அதேநேரத்தில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமியை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். இதனால் புதுவையிலும் ஆட்சி மாற்றம் நடக்கப் போவது உறுதி என இரவு முதலே பரபரப்பு நிலவி வருகிறது.
ரெங்கசாமி- நமச்சிவாயம் ஆலோசனை
இதை உறுதிப்படுத்தும் வகையில் இன்று புதுவை காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயத்தை தொடர்பு கொண்டு ரெங்கசாமி பேசியுள்ளார். ரெங்கசாமியின் அக்கா மகன்தான் நமச்சிவாயம். அடுத்தடுத்து ஆலோசனைகளால் புதுவையில் எந்த நேரத்திலும் ஆட்சி மாற்றம் நிகழலாம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுவை சட்டசபைக்கு அண்மையில் 3 பாஜக எம்.எல்.ஏக்கள் நியமிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.