ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்பு.. மாணவர்களை அடித்து உதைத்த பாஜகவினர்… வேடிக்கை பார்த்த வானதி சீனிவாசன்
ஈரோட்டில் ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற பாஜகவினரை மாணவர்கள் தடுத்துள்ளனர். அவர்களை பாஜகவினர் தாக்கியதில் ஒருவர் காயம் அடைந்துள்ளார். பாஜகவினர் மாணவர்களை அடித்து உதைத்ததை வானதி சீனிவாசன் வேடிக்கை பார்த்ததா
ஈரோடு: ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற பாஜகவினரை நிரந்தர சட்டம் தேவை என்று போராடும் மாணவர்கள் தடுத்து நிறுத்தியதால், ஆத்திரம் கொண்ட பாஜகவினர் மாணவர்களை அடித்து உதைத்துள்ளனர். இந்தத் தாக்குதலில் மாணவர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் இதனை தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தொடர் போராட்டம் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஈரோடு வீரப்பன்பாளையத்தில் பாஜகவினர் ஜல்லிக்கட்டை நடத்த 9 மாடுகளுடன் ஒன்று கூடினார்கள். இதனை ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தும் மாணவர்கள் இதனை கடுமையாக எதிர்த்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர், ஜல்லிக்கட்டுக்காக தொடர்ந்து போராடி வரும் மாணவர்களையும், இளைஞர்களையும் அடித்து உதைத்துள்ளனர். இதில் மாணவர் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரோட்டில் ஜல்லிக்கட்டு நடத்த ஒன்று கூடிய கூட்டத்தில் தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசனும் பங்கேற்றுள்ளார். அவரது முன்னிலையில்தான் மாணவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த தாக்குதலின் போது வானதி சீனிவாசன் அதனை தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாணவர்கள் மீதான தாக்குதலை பாஜகவினர் நடத்தினாலும், மாணவர்கள், இளைஞர்கள் தொடர்ந்து போராடி பாஜகவினர் ஜல்லிக்கட்டை நடத்தவிடாமல் தடுத்தனர். மேலும், ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரச் சட்டம் கோரி தொடர் போராட்டத்தை அவர்கள் நடத்தி வருகின்றனர்