ஸ்ரீரங்கம்: கடைசி வரை திக்… திக்… வேட்பு மனு ஏற்கப்பட்டதால் நிம்மதி பெருமூச்சு விட்ட பாஜக
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் மனுவை நிராகரிக்க காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் வேட்பாளர் சுப்ரமணியத்தின் வேட்புமனு ஏற்கப்படுவதாக தேர்தல் அதிகாரி மனோகரன் அறிவிக்கவே பாஜகவினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
காலியாக உள்ள ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட பா.ஜ.க. வேட்பாளர் சுப்ரமணியம் கடந்த சனிக்கிழமையன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனுவில், அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விவரங்களை மறைத்துள்ளதால் சுப்ரமணியத்தின் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என காங்கிரஸ் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் பாபு தலைமை தேர்தல் அலுவலர் பழனிச்சாமியிடம் புகார் அளித்தார்.
மோசடி வழக்கு உள்பட 3 வழக்குகள் சுப்ரமணியம் மீது உள்ளதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாபு குற்றம் சாட்டினார். இதனால் சுப்ரமணியம் தாக்கல் செய்த வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் எனவும் தனது புகாரில் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து சுப்ரமணியத்தின் மனு ஏற்கப்படுமா அல்லது தள்ளுபடியாகுமா என கேள்வி எழுந்தது. இது தொடர்பான தனது முடிவை மாலை மூன்று மணிக்கு அறிவிப்பதாக தேர்தல் அதிகாரி மனோகரன் அறிவித்தார்.
இதனால் பாஜகவினரிடையை பதற்றம் உருவானது. மூன்று மணிவரை முள்மேல் நின்றிருப்பது போல காத்திருந்தனர். இந்த நிலையில் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் சுப்ரமணியத்தின் வேட்புமனு ஏற்கப்படுவதாக தேர்தல் அதிகாரி மனோகரன் அறிவித்தார். இதனையடுத்தே பாஜகவினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
கடந்த லோக்சபா தேர்தலின் போது நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது அதேபோல ஸ்ரீரங்கத்திலும் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டு விடுமோ என்ற அச்சம் பாஜகவினரிடையே ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.