சசிகலா முதல்வராவதை பாஜகவால் தடுக்க முடியாது.. சொல்கிறார் திருநாவுக்கரசர்
சசிகலா தமிழக முதல்வராவதை பாஜகவால் தடுக்க முடியாது என திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா முதல்வராக பதவியேற்பதை பாஜக.,வால் தடுக்க முடியும் என நினைக்கவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் பிப்ரவரி 7 அல்லது 9-ம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்பார் என கூறப்பட்டுவந்தது. இதனிடையே சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் சசிகலா முதல்வராக பதவியேற்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தது.
இதற்கிடையே ஆளுநரின் தமிழக பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. மேலும் பதவி ஏற்பு குறித்து தேதி எதுவும் ஆளுநர் வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் சசிகலா பதவியேற்பதில் சிக்கல் உருவாகியுள்ளது. சசிகலா முதல்வராக பதவியேற்பதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் அளித்த பேட்டியில், மத்தியில் உள்ள பாஜக அரசு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்பதை தடுக்க முடியும் என நினைக்க வில்லை என்று தெரிவித்துள்ளார். அதோடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து இப்போது பேசுவதால் எந்த பயனும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.