அடடே! ஜெ. முதல்வரானதால் மகிழ்ச்சியோ வருத்தமோ இல்லையாம்- பா.ஜ.கவின் முரளிதரராவ் கருத்து!
சென்னை: தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்றதில் எங்களுக்கு மகிழ்ச்சியும் இல்லை.. வருத்தமும் இல்லை என்று பா.ஜ.க. தேசிய பொது செயலாளர் முரளிதரராவ் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் முரளிதரராவ் கூறியதாவது:
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்து ஒரு ஆண்டு நிறைவடைகிறது. இந்த ஓராண்டில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஊழல் இல்லாத ஆட்சியை இந்த ஓராண்டு கொடுத்துள்ளோம்.
பா.ஜ.க.வின் ஓராண்டு சாதனையை விளக்கி வரும் 31-ந் தேதி வரை, கண்காட்சி, பொதுக்கூட்டம் என்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் 29-ந் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் பங்கேற்று பேசுகிறார். நாடு முழுவதும் இதுவரை 10 கோடி பேர் பா.ஜ.க.வில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.
தமிழகத்தில் 45 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்து உள்ளனர். கடந்த 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் தான் தொழில் அதிபர்களுக்கு ஆதரவாக இருந்தார்கள். விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை.
காங்கிரஸ் ஆண்ட மாநிலங்களில் தான் விவசாயிகள் அதிகம் தற்கொலை செய்து கொண்டனர். அதனால் ப.சிதம்பரம் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதில் அளிக்க வேண்டியதில்லை. பா.ஜ.க.வை விமர்சிக்கும் தகுதி அவருக்கு இல்லை. அவர் நிதி அமைச்சராக இருந்தபோது தான் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது.
நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுதலை செய்துள்ளது. இதில் நாங்கள் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அவர் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றதால் எங்களுக்கு மகிழ்ச்சியும் இல்லை, வருத்தமும் இல்லை. சென்னையில் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடுவது குறித்து பரிசீலனை செய்யப்படும்.
இவ்வாறு முரளிதரராவ் தெரிவித்தார்.