புதுச்சேரிக்கு பாஜகவின் 3 நியமன எம்எல்ஏக்கள் - மத்திய அரசு அரசாணை வெளியீடு
புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக நியமிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி: புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்கள் நியமிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவு நகலை பாஜகவினர் உட்பட 3 பேரும் ஆளுநரிடம் பெற்று புதுவை சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர்.
புதுச்சேரி மாநில அரசு பொறுப்பேற்று ஓராண்டாகியும் நியமன எம்எல்ஏக்களை நியமிக்கவில்லை. மத்திய பாஜகவின் உத்தரவுப்படிதான் ஆளுநர் கிரண்பேடி தாமாகவே 3 பேரை நியமன எம்எல்ஏக்களை நியமிக்க மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைத்தார்.
அப்பட்டியலில் பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், பாஜக பொருளாளர் சங்கர், தனியார் பள்ளி அதிபர் செல்வகணபதி ஆகியோர் பெயர் இடம் பெற்றிருந்தன.
இந்நிலையில் நியமன எம்எல்ஏக்கள் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அரசு விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. இவ்வழக்கு புதன்கிழமையன்று விசாரணைக்கு வருகிறது. ஆளுநர் கிரண்பேடி பரிந்துரைத்த 3 பேர் நியமன எம்எல்ஏக்களாக்கி மத்திய அரசின் பரிந்துரை கடிதம் புதுச்சேரிக்கு வந்தது.
இதுதொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட்ட 3 எம்எல்ஏக்களும் நேற்று சந்தித்தனர். மத்திய அரசு எம்எல்ஏக்களாக நியமித்து அனுப்பிய கடிதத்தை பெற்றனர்.
சபாநாயகருடன் சந்திப்பு
அதைத்தொடர்ந்து தலைமை செயலர் மனோஜ் பரிதாவை சந்தித்து, அவரிடமிருந்து மத்திய அரசு அனுப்பிய உத்தரவு நகலையும் பதவியேற்புக்கான கடிதத்தையும் பெற்றனர். அதைத்தொடர்ந்து அக்கடிதத்தை எடுத்து கொண்டு சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்து வழங்கினர்.
சபாநாயகர் பேட்டி
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் வைத்திலிங்கம், மூன்று நியமன எம்எல்ஏக்கள் நியமனம் பற்றி அரசிதழில் வெளியிடப்படும். அதையடுத்து சட்டசபை செயலருடன் ஆலோசனை நடக்கும். பின்னர், நியமன எம்எல்ஏக்கள் பதவியேற்பது தொடர்பாக முடிவு செய்யப்படும் என்றார்.
நியமன எம்எல்ஏக்களுக்கு எதிர்ப்பு
நகர் முழுவதும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தில் ஜனநாயகத்திற்கு எதிராகவும் பாஜக - ஆர்எஸ்எஸ்க்கு ஆதரவாக செயல்படுவதாக சுவரொட்டியில் பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டியிருந்தன.
அரசாணை வெளியீடு
இதனிடையே புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்கள் நியமிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நியமன எம்எல்ஏக்கள் எப்போது பதவியேற்பார்கள் என்று சபாநாயகர் அறிவிப்பார்.