சசிகலா, தினகரனைத் தொடர்ந்து பாஜகவின் அடுத்த குறி நடராசன்? சசிகலா புஷ்பாதான் ஆயுதம்
சென்னை: சுவரொட்டிகளில் தன்னை அவதூறாக சித்தரித்ததாகக் கூறி கோகுல இந்திரா, இன்பதுரை எம்.எல்.ஏ உள்பட 15 பேர் மீது டெல்லி போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார் சசிகலா புஷ்பா எம்.பி. ' சுவரொட்டியை அடித்தது மட்டுமல்லாமல், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என இந்தியா முழுவதும் பரவவிட்டது சசிகலா கணவர் நடராசன்தான்' எனக் கொதிக்கின்றனர் சசிகலா புஷ்பா ஆதரவாளர்கள்.
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற காலத்திலேயே, 'அவரைச் சுற்றியுள்ள கும்பலால் ஆபத்து' என டெல்லியை அதிர வைத்தவர் சசிகலா புஷ்பா.
ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, 'கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்' என அதிர வைத்தார். இதற்காக வேட்புமனு வாங்க வந்த அவருடைய கணவர் லிங்கேஸ்வர திலகனை அ.தி.மு.க நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து தாக்கினர்.
சசிகலா புஷ்பா தனி அணி
தற்போதும் எடப்பாடி பழனிசாமி அணி, பன்னீர்செல்வம் அணி எந்தக் கோஷ்டியிலும் சேராமல் தனி லாபி நடத்தி வருகிறார் சசிகலா புஷ்பா. இந்நிலையில், அ.தி.மு.க பிரமுகர்கள் மீது டெல்லி போலீஸில் புகார் மனு கொடுத்திருக்கிறார். இதன்பேரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எதிர்ப்பது இவர்தான்
சசிகலா புஷ்பா ஆதரவாளர்களிடம் பேசினோம். " தொடக்கத்தில் இருந்தே சசிகலா கோஷ்டியை கடுமையாக எதிர்த்து வருகிறார் சசிகலா புஷ்பா. ' பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி போன்றோர் எல்லாம் சசிகலா காலில் விழுந்து பதவி வாங்கியவர்கள்' என்று தொடர்ந்து விமர்சித்து வருகிறார். தற்போது வரையில் சசிகலா குடும்பத்தை வலுவாக எதிர்ப்பது அவர் மட்டும்தான்.
ஆபாச போஸ்டர்கள்
' பொதுச் செயலாளர் பதவிக்குத் தேர்தல் நடத்த வேண்டும்' என தேர்தல் ஆணையத்தில், சசிகலா புஷ்பா புகார் கொடுத்தார். இதைக் கண்டு கொதித்த சசிகலாவுக்கு வேண்டப்பட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், புஷ்பாவுக்கு எதிராக ஆபாச போஸ்டர்களை ஒட்டினர். அந்த போஸ்டரில் அவர் தலையில் கொம்பை வரைந்து, ' அ.தி.மு.கவை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீ யார்?' என ஒருமையில் திட்டியிருந்தனர். இந்தப் போஸ்டர்கள் எல்லாம் வாட்ஸ்அப்பில் வலம் வந்தன.
இதனை எல்லாம் சேகரித்து வைத்திருந்தார். இதற்குக் காரணமான 15 பேர் குறித்து நேற்று டெல்லி போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார்.
நடராசன் மூல காரணம்
இந்தப் பட்டியலில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ இன்பதுரை, சசிகலா புஷ்பாவின் உறவினர் ஆனந்தராஜ் உள்ளிட்டவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த சுவரொட்டிகளை ஒட்டுவதற்குத் தூண்டுதலாக இருந்தது நடராசன்தான். அவருடைய உத்தரவின்பேரில்தான், இந்த அவதூறு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
நமது எம்ஜிஆர்
' சமூக வலைத்தளங்களில் இந்தப் போஸ்டர்களை உலவவிட்டது நடராசன்தான். அவர் மீது சைபர் கிரைம் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனப் புதிய புகார் மனு ஒன்றை அளிக்க உள்ளார் சசிகலா புஷ்பா. கூடவே, நமது எம்.ஜி.ஆரில் வெளியான கட்டுரைகளையும் தொகுத்து வைத்திருக்கிறார். ஒரு கட்டுரையில், ' உன்னுடைய பூக்கடை சமாச்சாரங்களைச் சொல்லவா?' எனக் கீழ்த்தரமாக விமர்சனம் செய்திருந்தது நமது எம்.ஜி.ஆர்.
நடராசனை கைது செய்ய வைக்க திட்டம்
'இந்தக் கட்டுரை சசிகலா குடும்பத்தினரின் தூண்டுதலில்தான் எழுதப்பட்டது. இதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' எனவும் குறிப்பிட இருக்கிறார். நடராசன் மீது கொடுக்கப்படும் புகாரின்பேரில், 'அவரை டெல்லி போலீஸ் கைது செய்ய வேண்டும்' என்ற அழுத்தத்தையும் பா.ஜ.க மேலிடத்தின் வழியாக கொடுத்துக் கொண்டிருக்கிறார் சசிகலா புஷ்பா" என்றனர் விரிவாக.
பாஜக எதிர்ப்பாளர்
" தமிழக அரசியலில் பா.ஜ.கவின் ஆதிக்கத்தை தொடக்கம் முதலே எதிர்த்து வந்தார் நடராசன். 'ஆடிட்டர் குருமூர்த்தியின் தூண்டுதலில்தான் அனைத்தும் நடக்கிறது' என அவருக்கு எதிராகப் பேட்டியும் அளித்தார். ' காங்கிரஸ் தயவில்தான் நடராசன் ஆடிக் கொண்டிருக்கிறார். அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் தேசத்துக்கு விரோதமானவர்கள்' என்ற மனநிலையில் மத்திய அரசு இருக்கிறது. சசிகலா புஷ்பாவின் புகாரை நடராசனுக்கு எதிரான முக்கிய ஆயுதமாகப் பார்க்கின்றனர். அதனால்தான், நேற்று புகார் கொடுத்த மாத்திரத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவானது" என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.