திமுகவை தனிமைப்படுத்த திட்டம்? விஜயகாந்த்- சுப்பிரமணியன் சுவாமி சந்திப்பின் பரபர பின்னணி
சென்னை: திமுகவுடன் விஜயகாந்த் கட்சி கூட்டணி சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி இன்று அவரை சந்தித்து பரபரப்பை கிளப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் முஸ்திபுகளில் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் மறைமுகமாகவோ, நேரடியாக ஈடுபட்டுவருகின்றன.
4 முனை போட்டி
இதில் வழக்கத்துக்கு மாறாக இந்த சட்டசபை தேர்தலில் மும்முனை அல்லது நான்குமுனை போட்டி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மும்முனை போட்டி ஏற்பட்டால் அதன் பாதிப்பு அதிமுகவைவிட திமுகவுக்கே அதிகம். ஏனெனில் அரசுக்கு எதிரான வாக்குகள் மொத்தமாக திமுகவுக்கு செல்லாமல், பிரிந்துவிடும். ஆனால் ஆதரவு வாக்குகள் அப்படியே அதிமுகவுக்கு கிடைத்துவிடும்.
திமுகவுக்கு தேவை கூட்டணி
இந்த நிலை ஏற்பட்டால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது என்பதில் திமுக திட்டவட்டமாக உள்ளது. அக்கட்சியின் பேச்சாளர்கள் பலரும் இதை வெளிப்படையாகவும் தெரிவித்துவிட்டனர். இதன் ஒருபகுதியாகத்தான் திமுகவின் டி.கே.எஸ்.இளங்கோவன் திமுக 170 சீட்டுகளில் போட்டியிடும் என்று ஜபர்தஸ்சாக கொடுத்த பேட்டியை அவசர, அவசரமாக மறுத்து, இல்லை... இல்லை நாங்கள் கூட்டணி கட்சிகளுக்கு சீட்டுகளை அள்ளி கொடுக்க தயாராக உள்ளோம் என்று மறைமுகமாக தெரிவித்துவிட்டது.
விஜயகாந்த் துருப்பு சீட்டு
பாமக தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துவிட்டது. விஜயகாந்த், காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் ஆகியோர் இணைந்து ஒரு கூட்டணி அமைத்தால் அது 4முனை போட்டிக்கு வழி வகுத்துவிடும். இதில் காங்கிரஸ் திமுக பக்கம் செல்ல வாய்ப்புள்ளது. அப்படி சென்றாலும், திமுகவுக்கு செல்ல வேண்டிய வாக்குகளை இந்த கூட்டணி வலுவாக பிரித்துவிடும். எனவே விஜயகாந்த் கட்சியை இழுப்பதில்தான் திமுக அபார சிந்தனைகளில் மூழ்கியுள்ளது.
தகர்த்த சாமி
இந்நிலையில்தான், சுப்பிரமணியன் சுவாமி, இன்று, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து பேசியுள்ளார். அதன்பிறகு அளித்த பேட்டியில், அதிமுக, திமுகவுக்கு மாற்றாக மூன்றாவது அணி பலம்பெற்று விளங்கும் என்று கூறியுள்ளார். இதன்மூலம், விஜயகாந்த்தை மூன்றாவது பெரிய சக்தியாக, சுப்பிரமணியன்சுவாமி வலிய வந்து சர்டிபிகேட் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.
விஜயகாந்த்தை இழுக்க முயற்சி
தேசிய ஊடகங்களால் உன்னிப்பாக கவனிக்கப்படும் சுப்பிரமணியன் சுவாமியே, விஜயகாந்த்துக்கு சர்டிபிகேட் கொடுத்துவிட்டதால், அவர் திமுகவுடன் இணைய மாட்டார் என்று பாஜக கணக்குபோடுகிறது. அவ்வாறு கூட்டணியில் சேராவிட்டால் பாஜக கூட்டணியில் விஜயகாந்த்தை தொடரச் செய்யலாம்.
அதிமுக பக்கமும் சாயலாம்
விஜயகாந்த் பக்கம் சேர பாஜகவுக்கு விருப்பமில்லாவிட்டாலும்கூட, தேர்தல் நெருங்கும்வரை கூட்டணி அமைப்பதுபோல பிம்பத்தை உருவாக்கிவிட்டு, அதிமுக பக்கம் பாஜக சேர்ந்துவிடலாம் என்பது அக்கட்சியின் திட்டமாக தெரிகிறது. இதன்மூலம், 4 முனை போட்டியை தமிழகத்தில் உருவாக்கி திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் செய்துவிட வேண்டும் என்று பாஜக திட்டமிடுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.