சிக்கலில் அதிமுக.. முடங்கப்போகிறதா இரட்டை இலை சின்னம்? வைகை செல்வனிடம் திடீர் பதற்றம்
வைகை செல்வன், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையை பாஜக தலைவர்கள் பெயரை குறிப்பிட்டு குற்றம்சாட்டியுள்ளார். இவ்வாறு அவர் தற்போது ஏன் குற்றம்சாட்டுகிறார் என்ற பதற்றம் அதிமுக வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.
சென்னை: பாஜக தலைவர்கள் பேச்சை பார்த்தால் இரட்டை இலையை முடக்க சதி நடப்பதை போல தெரிவதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகை செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆர்கேநகர் இடைத் தேர்தலில் சசி தரப்பு அதிமுக சார்பில் டிடிவி தினகரனும், ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளராக மதுசூதனனும் போட்டியிட உள்ளனர்.
இந்த நிலையில், அதிமுக சின்னமான, இரட்டை இலையை இரு கோஷ்டிகளுமே உரிமை கோரிவருகின்றன. எனவே, தேர்தல் ஆணையத்திடம், பஞ்சாயத்து போயுள்ளது.
பாஜக தலைவர்கள்
இந்நிலையில், வைகை செல்வன், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையை பாஜக தலைவர்கள் பெயரை குறிப்பிட்டு குற்றம்சாட்டியுள்ளார். இவ்வாறு அவர் தற்போது ஏன் குற்றம்சாட்டுகிறார் என்ற பதற்றம் அதிமுக வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் வாய்ப்புள்ளதாக அவருக்கு ஏதேனும் ஊர்ஜித தகவல்கள் வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை அவரது அறிக்கை அப்பட்டமாக சொல்கிறது.
தமிழிசை மீது குற்றச்சாட்டு
வைகை செல்வன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜக தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா போன்றோர் தொடர்ச்சியாக இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறிவருவதை பார்த்தால், பின்னணியில் பெரும் சதி உள்ளதாக தெரிகிறது.
திமுக சின்னம் இருந்ததே
திமுகவிலிருந்து, வைகோநீக்கப்பட்டபோது பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் அவரோடு சென்றபோதிலும், திமுக சின்னம் முடக்கப்படவில்லை. அதுபற்றி வைகோவும் கவலைப்படவில்லை. ஆனால் இப்போது மட்டும் ஏன் இரட்டை இலை குறித்து பேச்சு வருகிறது.
ஓ.பி.எஸ் ஒரு கருவி
சிலர், இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று பகிரங்கமாக பேசிவருகிறார்கள். அவர்களின் ஆசையை நிறைவேற்றும் கருவியாக ஓ.பன்னீர்செல்வம் மாறியுள்ளார். ஓ.பன்னீர்செல்வத்துடன் சென்ற பலர் செல்லா காசாகியுள்ளனர். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கு பிறகு தவறை உணர்ந்து அவர்கள் தாய் வீட்டுக்கு திரும்பு வருகிறார்கள். இவ்வாறு வைகை செல்வன் கூறியுள்ளார்.
தமிழிசை பதிலடி
இதுகுறித்து பாஜக தலைவர் தமிழிசையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு அவர் அளித்த பதில்: எதற்கெடுத்தாலும் பாஜகவை குற்றம் சொல்கிறார்கள் என்றால் பாஜகவை பார்த்து அதிமுக பயப்படுகிறது என்றே அர்த்தம். தமிழிசையும், ராஜாவும், ஒரு கட்சியின் சின்னத்தை முடக்க முடியும் என்று கூறுவதை மக்கள் எப்படி நம்புவார்கள்? ஏற்கனவே ஜெயலலிதா மற்றும் ஜானகி அணியினரின் தகராறு காரணமாக இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. வரலாற்றை வைத்துதான் நாங்கள் கருத்து கூறிவருகிறோம். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டபோது தமிழிசை அரசியலில் இல்லையே.. என்றார்.