அதிமுக ஆபேரசனுக்கு முட்டுக்கட்டை... தமிழிசையின் ஆரூடங்களுக்கு ஆப்பு வைத்த அமித்ஷா!
அதிமுக தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கக் கூடாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு டெல்லி மேலிடம் உத்தரவிட்டுள்ளதாம்.
சென்னை: அதிமுக தொடர்பாக ஆரூடங்களை கூறி வரும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை கடுமையா கண்டித்துள்ளாராம் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா.
அதிமுகவை கையில் எடுத்துக் கொண்டு குரங்கு வித்தையை காட்டிக் கொண்டிருக்கிறது பாஜக. இதில் ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகள் வசமாக சிக்கிக் கொண்டும் இருக்கின்றனர்.
சப்தமில்லா ஆபரேசன்
டெல்லி பாஜக இப்படி ஒரு ஆபரேசனை சப்தமில்லாமல் நடத்தி வருகிறது. ஆனால் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரரராஜனோ ஆபரேசனின் ரிசல்ட்டுகளை சவுண்டாக அம்பலப்படுத்தி வருகிறார்.
சந்திக்கு வரவைத்த தமிழிசை
இரட்டை இலை முடக்கம், ஆர்கே நகர் தேர்தல் ரத்து என பல விஷயங்களில் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்த கருத்துகளின்படியே நடந்தும் இருக்கிறது. இதனால் சப்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கும் பாஜக ஆபரேசன் சந்திக்கு வந்துவிட்டது.
அதிருப்தியில் பாஜக
தமிழிசையின் இந்த பேட்டிகளால் ஒரு கட்சியையே இப்படி கபளீகரம் செய்கிறதே பாஜக என பகிரங்கமான விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது டெல்லி பாஜக மேலிடத்தை கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளதாம்.
தமிழிசைக்கு நெருக்கடி
இதையடுத்துதான் தமிழிசையை கடுமையாக கண்டித்திருக்கிறார் அமித்ஷா. ஏற்கனவே மாநில தலைவர் பதவி நீட்டிப்பில் இருக்கும் தமிழிசை, அலறியடித்துக் கொண்டு அதிமுக விவகாரத்தில் நாங்கள் தலையிடமாட்டோம் என அறிக்கை ஒன்றை டெல்லிக்கு ஓலையாக அனுப்பி வைத்துள்ளாராம்.