அதிமுக உள் கட்சி விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்!
அதிமுக உள்கட்சி விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
டெல்லி: தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் என்பது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பான பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அதிரடியாக அவர் முதல்வர் பதவிக்கு வரும் வகையில் கபளீகரம் செய்து வருகிறார்.
அவரது பதவியேற்பு விழாவிற்கான நடைமுறைகள் தொடங்கிய நிலையில் நிலையில், ராஜினாமா செய்த முதல்வர் பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். எனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டேன் என்று அவர் கூறினார்.
இந்நிலையில் தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு அதிமுக தான் காரணம். இதில் நாங்கள் செய்வதற்கும், சொல்வதற்கும் எதுவும் இல்லை. ஆளுநருடன் தொடர்பு கொண்டு நீங்கள் இவருக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வையுங்கள் என்றோ, இவரை முதல்வராக நியமிக்க கூடாது என்று கூறுவதோ எனது வேலை கிடையாது. இது அதிமுகவின் உட்கட்சி விவகாரம். இதில் மத்திய அரசு தலையிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.