ஸ்ரீரங்கத்தில் மும்முனைப் போட்டி? தேமுதிக, மதிமுக ஆதரவுடன் களம் இறங்க பாஜக திட்டம்!
சென்னை: ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தலில் தேமுதிக, மதிமுக ஆதரவுடன் களம் இறங்குவதற்கு பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு வருகிறது. இத்தொகுதியில் அதிமுக, திமுகவும் போட்டியிட இருப்பதால் மும்முனைப் போட்டிக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்று முதல்வர் ஆன ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தண்டனை விதித்தது. இதையடுத்து முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ. பதவியை ஜெயலலிதா இழந்தார். சட்டசபை செயலகம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
இதையடுத்து ஸ்ரீரங்கம் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஒரு தொகுதி காலியான 6 மாதங்களில் அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி.
மார்ச் மாதத்துக்கூள் தேர்தல்
தீர்ப்பு வழங்கப்பட்ட செப்டம்பர் 27-ந்தேதியில் இருந்து ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்துக்குள் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும்.
அரசியல் கட்சிகள் மும்முரம்
எனவே, ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பதால் இடைத்தேர்தலில் இங்கு போட்டியிட்டு தங்கள் செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என்று தமிழகத்தின் முக்கிய கட்சிகள் கருதுகின்றன.
உள்ளாட்சி தேர்தல்
உள்ளாட்சி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக பாரதிய ஜனதா மட்டுமே பிரதான கட்சியாக களம் இறங்கியது. இதற்கு லோக்சபா தேர்தலின் போது பாஜக கூட்டணியில் இடம் பெற்ற தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளும் ஆதரவு அளித்தன. இடதுசாரி கட்சிகள் சில இடங்களில் நின்றன. தி.மு.க., காங்கிரஸ் போட்டியிடவில்லை.
தமிழக அரசுடன் பாஜக மோதல்
தமிழ்நாட்டின் பல்வேறு பிரச்சினைகளில் ஆளும் அ.தி.மு.க. அரசை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். தூக்கு தண்டனை பெற்ற தமிழக மீனவர்கள் 5 பேர் பிரதமர் மோடி முயற்சியால் விடுதலை செய்யப்பட்டனர். இதை முன்னிலைப்படுத்துவதிலும், அ.தி.மு.க., பாஜக இடையே பெரும் மோதல் ஏற்பட்டது.
ஸ்ரீரங்கத்தை குறிவைக்கும் பாஜக
இதனால் இந்த இடைத்தேர்தலில் களம் இறங்கி 2016 சட்டசபை தேர்தலுக்கு அடித்தளம் அமைக்க வேண்டும் என்பதில் தமிழக பாஜக தீவிரமாக உள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுவதற்கான முதற்கட்ட ஏற்பாடுகளிலும் அந்த கட்சி இறங்கி இருக்கிறது.
கூட்டணி கட்சிகள் ஆதரவுடன்...
2016 சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க., பா.ம.க. கட்சிகள் தங்கள் தலைமையில் தான் கூட்டணி என்று பேசி வருகின்றன. இதற்கு பாஜக ஆதரவு அளிக்கும் என்ற கருத்தை அந்த கட்சியினர் கூறி வருகிறார்கள். ம.தி.மு.க.வும் இன்னும் பாஜக கூட்டணியில்தான் இருப்பதாக சொல்லி வருகிறது. அ.தி.மு.க. அரசை இந்த கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. எனவே ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் பாஜகவுக்கு தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் ஆதரவு அளிக்கும் என்று தெரிகிறது.
பாஜகவின் கணக்கு
ஸ்ரீரங்கம் தொகுதியில் பாஜகவுக்கு சற்று ஆதரவு அதிகம். கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து அ.தி.மு.க.வை எதிர்த்தால் கணிசமான வாக்குகளைப் பெற முடியும். இதன்மூலம் தமிழ்நாட்டில் பாஜகவின் பலமும் செல்வாக்கும் அதிகரிக்கும். எனவே போட்டி உறுதி. இதற்கு கூட்டணி கட்சிகள் நிச்சயம் துணை நிற்கும் என்பதுதான் பாஜகவின் கணக்கு
மும்முனைப் போட்டி?
ஸ்ரீரங்கம் தொகுதியில் தி.மு.க.வும் வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சி என்ன முடிவு செய்யும் என்பது தெரியவில்லை. எனவே இந்த இடைத்தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.