சட்டசபை தேர்தல்: வாக்கு வங்கியை வைத்து ஏ பிளஸ், ஏ, பி- தொகுதிகளை பிரித்து வியூகம் வகுக்கும் பாஜக
சென்னை: தமிழகத்தில் தமக்கான வாக்கு வங்கி அடிப்படையில் தொகுதிகளை பல கட்டங்களாகப் பிரித்து சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள பாரதிய ஜனதா கட்சி வியூகம் வகுத்து வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் தலித்துகளை இலக்கு வைத்து பிரசாரம் மேற்கொள்ள பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா தமிழகம் வருகை தர உள்ளதாகவும் அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 50 ஆண்டு காலமாக தமிழக அரசியலும் ஆட்சி - அதிகாரத்திலும் திராவிடக் கட்சிகளே கோலோச்சி வருகின்றன. இதற்கு மாற்றாக தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்க்கும் முயற்சியில் பாரதிய ஜனதா களமிறங்குகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளை ஏ பிளஸ், ஏ மற்றும் பி என மூன்று வகையில் பிரித்து, அதன் அடிப்படையில் வியூகங்களை வகுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏ பிளஸ்
கோவை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க வாக்கு வாங்கி இருப்பதால் இவை ஏ பிளஸ் தொகுதிகள் என வரையறுக்கப்பட்டுள்ளதாம். மற்ற மாவட்டங்களில் ஏ மற்றும் பி ஆகிய பிரிவுகளும் கண்டறியப்பட்டுள்ளதாக பாஜக கூறுகிறது.
அமித்ஷா வருகை
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மட்டுமின்றி, மத்திய அமைச்சர்களும் அவ்வப்போது தமிழகம் பயணம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாம். ஒவ்வொரு தொகுதியிலும் 5,000 துடிப்பான உறுப்பினர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மூலம் கட்சிகளை வலுப்படுத்தும் திட்டமும் தீட்டப்பட்டுள்ளதாம்.
இது தொடர்பாக பாஜகவின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதர ராவ் கூறுகையில், எங்கள் தேசிய தலைவர் அமித் ஷா விரைவில் தமிழகம் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
தலித்துகளை இலக்கு வைத்து
தலித்து மக்கள் மீது கவனம் செலுத்துவது அவரது பயணத்தில் முக்கிய அம்சமாக இருக்கும். அவரது தமிழகப் பயணம் என்பது வெறுமனே தலைநகரம் செல்வது மட்டுமில்லை. தமிழகத்தில் ஒரு மாற்று இருப்பதை மக்கள் மனதில் பதியச் செய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
சாதகமான தொகுதிகள்..
தமிழக சட்டசபை தொகுதிகளில் எங்கள் கட்சிக்கு சாதகமான தொகுதிகளை அடையாளம் காணத் தொடங்கிவிட்டோம் என்றார்.