பாசம் காட்டி பயமுறுத்தும் பாஜகவின் திருவிளையாடல்... சின்னப்புள்ளைக்கும் தெரியுமே - திருநாவுக்கரசர்
அதிமுகவின் ஒரு அணியை பலப்படுத்தி மற்றொரு அணியை பலவீனப்படுத்தி பாஜக திருவிளையாடல் செய்வதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காது என்பதாலும், எந்தக் கட்சியும் கூட்டணிக்கு வராது என்பதாலும் பாஜக கொல்லைப்புறம் வழியாகக் காலூன்ற முயற்சித்து வருகிறது என்று திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார். பாஜக செய்யும் திருவிளையாடல் கிராமங்களில் இருக்கும் சின்ன குழந்தைகளுக்குக் கூட தெரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், தமிழகத்தில் மழை இல்லை, நீர் இல்லை. குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. காவிரி டெல்டா பாலைவனமாகி விட்டது. தமிழக அரசு இதற்கு போர்க்கால அடிப்படையில் மத்திய அரசிடம் நிவாரணம் பெற்று செயலாற்ற வேண்டும் என்றார்.
முடங்கிய அரசு
அமைச்சர்கள், முதல்வர் அன்றாட பணிகளில் கவனம் செலுத்தாமல் உள்ளதால் அரசு நிர்வாகம் முடங்கிக் கிடக்கிறது. கட்சி இரண்டு, மூன்றாகப் பிரிந்துகிடக்கிறது. அமைச்சர்கள் கருத்து வேறுபாடுகளுடன் இருக்கிறார்கள். எம்எல்ஏக்கள் பிரிந்து கிடக்கின்றனர். இது ஆட்சியைப் பாதிக்கிறது.
நூறு நாள் வேலை
100 நாள் வேலைத்திட்டமான மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கான ஊதியம் பெரும்பாலானோருக்கு வழங்கப்படவில்லை. அது விரைந்து வழங்கப்பட வேண்டும்.
பாஜக திருவிளையாடல்
அதிமுகவின் இரு அணிகளும் இணைவதில் சிக்கல் நீடிப்பதற்கு பாஜகவே காரணம். ஒரு அணியை பலப்படுத்தி மற்றொரு அணியை பலவீனப்படுத்த நினைக்கிறது பாஜக. இது பாஜகவின் திருவிளையாடல் என்பது சாமானியருக்கும் தெரியும். பாசமாக பேசியும், பயமுறுத்தியும் அதிமுக அணிகளை பாஜக ஆட்டிவைக்கிறது.
கொல்லைப்புறமாக நுழையும் பாஜக
அணிகள் உடைந்ததற்கும், இணைவதில் உள்ள சிக்கலுக்கும் பாஜகவே காரணம். அது நடத்திவரும் திருவிளையாடல் விரைந்து முடித்து வைக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காது என்பதாலும், எந்தக் கட்சியும் கூட்டணிக்கு வராது என்பதாலும் பாஜக கொல்லைப்புறம் வழியாக பாஜக காலூன்ற முயற்சித்து வருகிறது என்றும் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டினார்.