எடப்பாடி பழனிச்சாமி அரசை பாஜக மிரட்டுகிறது... செம்மலை பரபரப்பு தகவல்!
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசை, மத்தியில் ஆளும் பாஜக அரசு மிரட்டுகிறது என்று மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. செம்மலை கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களுடன் தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் ஒன்றை நடத்தினார். இதுவரை எந்த ஒரு மத்திய அமைச்சரும் தமிழ் நாடு தலைமை செயலகத்தில் ஆலோசனை செய்தது இல்லை. இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெயலலிதா,எம்ஜிஆர்,கருணாநிதி காலத்தில் கூட மத்திய அமைச்சர் ஒருவர் தலைமைச் செயலகத்தில் இதுபோன்று ஆய்வுக்கூட்டம் நடத்தியது இல்லை. இதனால் தமிழக அரசியலில் இது தொடர்ச்சியான அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
இது தொடர்பாக அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்த, மூத்த தலைவர் எஸ்.செம்மலை எம்.எல்.ஏ. முன்னணி ஆங்கில இதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில்,மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தி இருப்பது காரசாரமாகப் பேசியிருக்கிறார்.
எம்ஜிஆர்,ஜெயலலிதா காலத்தில் நடக்காத ஒன்று
"இதற்கு முன்பு எம்.ஜி.ஆர். அல்லது ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இது மாதிரியான சம்பவம் நிகழ்ந்தது இல்லை. எடப்பாடி பழனிசாமி அரசு பலவீனமாக இருப்பதால் அதை பாஜக பரிசோதித்து பார்க்கிறது. மெட்ரோ ரெயில் தொடக்க விழாவிலும் வெங்கய்யா நாயுடு சில கருத்துக்களை மிரட்டும் வகையில் தெரிவித்து இருக்கிறார்.
அச்சுறுத்தும் பாஜக
தனிப்பட்ட முறையில் என்னை பொறுத்தவரை இதை, அரசினை அச்சுறுத்தும் குரலாகவே கருதுகிறேன். ஏனெனில் இந்த அரசு பலவீனமாகவே இருக்கிறது. அதற்காக தமிழக அரசியல் விவகாரத்தில் பாஜக தலையீடுவதாக நான் சொல்லவில்லை.
ஜெ.அரசாக இருந்தால்...
வருமான வரி சோதனைக்கு உள்ளான அமைச்சர், மற்றும் வழக்குபதிவு செய்யப்பட்ட அமைச்சர்கள் மீது முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது ஜெயலலிதாவின் அரசாக இருந்தால் உண்மையில் அவர்களைத் தூக்கி எறிந்து இருக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் காரணம் சசிகலாதான்
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததற்கு சிறையில் இருக்கும் சசிகலாதான் காரணம். ஏனெனில் பெரும்பாலான அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அவர் பின்னால் இருக்கிறார்கள். அவர்களுக்கு இவர் பாதுகாப்பாக இருக்கிறார். தற்போதைய அரசு பணத்தின் மூலமே எதையும் சாதிக்கலாம் என்று கருதுகிறது. இதனால் இந்த அரசு பலவீனப்பட்டு கிடக்கிறது.
தலையில்லாத கோழி எடப்பாடி அரசு
நீட், போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் ஆகிய பிரச்சினைகளில் இந்த அரசு திறமையான முறையில் கையாளவில்லை. சரியான தலைமை நிர்வாகம் இல்லை. அரசும், கட்சியும் தலை இல்லாத கோழி போல் இருக்கிறது. இணைப்பு பேச்சு வார்த்தை குறித்து ஓ.பி.எஸ். தான் முடிவு செய்வார். அவர் என்ன முடிவு எடுத்தாலும் தொண்டர்கள் ஓபிஎஸ் பின்னால் நிற்பார்கள்." என்று கூறியிருக்கிறார்.