அதிமுக அணிகள் இணைப்பு.. பாஜக என்ன நினைக்கிறது தெரியுமா?
அதிமுகவின் எடப்பாடி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைய வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பமாக இருப்பதாக இணைப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்தி வரும் பாஜக "தலைகள்" கூறுகின்றன.
சென்னை : அதிமுகவின் இரு அணிகள் இணைய இருப்பதாக கடந்த இரண்டு நாட்களாகவே எடப்பாடி அணி கூறி வருகிறது. அதேசமயம், இது தான் பாஜகவின் விருப்பமும் என்பதும் தெரிய வந்துள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி இணைய வேண்டுமா என்பதை அதிமுகவினரைத் தாண்டி அதிக அக்கறையுடன் கவனித்து வருகிறது பாஜக. ஜெயலலிதா இறந்த பின்னர் சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் என அதிமுக உடைந்தது.
அதன் பின்னர் சசிகலா சிறைக்குப் போன பிறகு தினகரன் அணி, எடப்பாடி பழனிச்சாமி அணி என உடைந்து மொத்தம் அதிகாரப்பூர்வமாக 3 அணிகளாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் மூன்றுமே பாஜகவிற்கு சாதகமாக இருந்தன என்பது வேறு கதை. ஈபிஎஸ் அறிக்கை சாஷ்டாங்கமாக பாஜகவிற்கு ஆதரவாக இருந்தால், ஓ.பன்னீர்செல்வம் பட்டும் படாமல் சொல்வார், டிடிவி. தினகரனோ வேறு வழியில்லை என்பது போல பாஜகவிற்கு ஆதரவாகவே அவரின் அறிக்கையும் இருக்கும்.
நெருங்கும் அவகாசம்
அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் ஒரு அறிக்கை, முதல்வர் பழனிச்சாமி சார்பில் ஒரு அறிக்கை, தினகரன் சார்பில் ஒரு அறிக்கை என மாட்டிறைச்சி தடை விவகாரம் முதல் குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது வரை அனைத்து நடவடிக்கைகளிலும் அதிமுக சார்பில் 3 அறிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைவதற்காக தான் விலகுவதாக அறிவித்த தினகரன், இரு அணியும் இணைய வைத்த அவகாசம் ஆகஸ்ட் 5ம் தேதியுடன் முடிகிறது.
தினகரனால் பரபரப்பு
இரண்டு அணிகளும் இணையாததால் தான் கட்சியை கையில் எடுக்கப்போவதாக தினகரன் வெளிப்படையாகக் கூறிய நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கடந்த இரண்டு நாட்களாக அதிமுக அணிகள் தரப்பில் இணைப்பு சுறுசுறுப்படைந்துள்ளதாகத் தெரிகிறது.
பாஜகவிற்கு வேறு வழியில்லை
அதிமுகவின் ராஜ்யசபா உறுப்பினர் வைத்திலிங்கமும் அதிமுகவின் இரு அணிகள் இணையும் என்று செய்தியார்களிடம் கூறியுள்ளார். இந்நிலையில் தமிழக பாஜகவோடு தொடர்புடைய மூத்தத் தலைவர் அதிமுகவின் இரண்டுஅணிகளும் இணைய வேண்டும் என்றே அமித்ஷாவும், பிரதமர் மோடியும் விரும்புவதாகக் கூறியுள்ளனர். தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைப்பதற்கு சரியான தலைவர் இல்லை, அதே சமயம் அதிமுகவின் வெற்றிடத்தை பயன்படுத்திக் கொள்ள மேலும் பயணிக்க வேண்டியுள்ளது.
இணைந்தால் தான் கூட்டணி
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் வலுவான கூட்டணியில் உள்ளது, எனவே அதிமுகவிற்கு தேசிய கட்சியுடனான கூட்டணி என்றால் அது பாஜகவைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது. அவ்வாறே எதிர்வரும் தேர்தல்களில் கூட்டணி வைப்பதாக இருந்தாலும் இரண்டு அணிகளும் இணைந்திருக்க வேண்டும் என்றே பாஜக தலைமை விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
மோடியின் திட்டம்
தமிழக வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய பிரதமர் நரேந்திர மோடி தயாராக இருக்கிறார். ஆனால் இரண்டு அணிகள் இணைந்தால் மட்டுமே அது முடியும் என்று கூறியுள்ளதாகத் தெரிகிறது.