5 மீனவர் விடுதலையை முன்வைத்து "அறுவடைக்கு' தயாராகும் பாஜக
சென்னை: இலங்கையில் தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டு மீட்கப்பட்டிருக்கும் 5 தமிழக மீனவர்களின் விடுதலையை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் வேலையில் பாஜக இறங்கியுள்ளது.
2011ம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. பின்னர் 5 மீனவர்கள் மீதும் போதைப் பொருள் கடத்தியதாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் 5 மீனவர்களுக்கும் கொழும்பு உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதுவரை இந்த வழக்கில் மவுனம் சாதித்த மத்திய அரசு, உடனே மீனவர்கள் அப்பாவிகள், அவர்களை விடுதலை செய்ய இந்திய தூதரகமே மேல்முறையீடு செய்யும் என்று அறிவித்தது.
அத்துடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் பேசியதாக பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார். பின்பு இலங்கை உச்சநீதிமன்றத்தில் இந்திய தூதரகம் மேல்முறையீடும் செய்தது.
இதில் புதிய திருப்பமாக இலங்கை அதிபர் ராஜபக்சே 5 மீனவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்குவதாக அறிவித்தார். இதனால் மீனவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அவர்கள் இந்திய சிறையில் அடைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எவரும் எதிர்பாராத விதமாக அதிரடியாக 5 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இப்படி பல அதிரடி திருப்பங்களைக் கொண்ட இந்த விவகாரத்தில் மீனவர் விடுதலைக்குப் பின்னரும் கூட ஏகப்பட்ட களேபரங்கள் நிகழ்ந்துள்ளன.
விடுதலை செய்யப்பட்ட 5 மீனவர்களும் படகு மூலமாக ராமேஸ்வரம் திரும்புவர் என்று கூறப்பட்டது. பின்னர் 5 மீனவர்களும் விமானம் மூலமாக திருச்சி வருகிறார்கள் என்று எண்ணி ஒட்டுமொத்த மீனவர் குடும்பங்களே திருச்சியில் காத்துக் கிடந்தனர்.
அப்போதுதான் திடீரென 5 மீனவர்களும் டெல்லி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்ததாக தகவல்கள் வெளியாகின. அத்துடன் டெல்லியில் தமிழக அரசின் பிரதிநிதியையும் செய்தியாளர்களையும் சந்திக்கவிடாமல் முக்கிய பிரமுகர்களுக்கான வழியில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
மீனவர்கள் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்துப் பேசியதாக கூறப்பட்டு நள்ளிரவில் சென்னை வந்து சேர்ந்து பின்னர் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர்.
உடனே தமிழக பாஜக தலைவர் தமிழிசையோ, தமிழக முதல்வர் ஏன் நன்றி சொல்லவில்லை என்று கேட்க தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வமோ, மீனவர் விடுதலையில் அக்கறை கொண்டது அதிமுக அரசு; இதை அரசியலாக்கக் கூடாது என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.
ஒட்டுமொத்தமாக மீனவர் விடுதலையை முன்வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதில் பாரதிய ஜனதா மிகவும் முனைப்பு காட்டுவது அப்பட்டமாகவே தெரிகிறது.
இந்த 5 மீனவர் விடுதலையை அரசியலாக்கி ஆதாயமடைந்துவிடுவது என்று பாஜக கணக்குப் போடலாம்.. ஆனால் 5 மீனவர்களும் தங்கச்சிமடம் வந்து சேர்ந்த நாளில் 24 தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் காவல்நீட்டிப்பு செய்திருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
ஆட்சிக்கு வந்தால் 100 நாளில் மீன்வளத்துறை அமைச்சகம் அமைப்போம் என்று சொல்லிவிட்டு ஏமாற்றிக் கொண்டிருப்பது பாஜக என்பதை தமிழக மீனவர்கள் மறந்துவிடமாட்டார்கள்.
தமிழக மீனவர்களின் படகுகள் அனைத்தும் டி.ஆர்.பாலுக்களுக்கும் சசிகலாக்களுக்கும் சொந்தம்; அவற்றை பறிமுதல் செய்ய ராஜபக்சேவுக்கு அறிவுரை கொடுத்தேன்.. அதைத்தான் ராஜபக்சே செய்கிறார் என்று சொன்னதும் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமியே.
பாஜக, மீனவர் விடுதலையை முன்வைத்து ஒரு 'வாக்கு வேட்டை'க்கு புறப்படுகிறது... இந்த வேட்டையில் முயல் சிக்குமா அல்லது வலையே அறுந்து போகுமா என்பதை காலம் தான் சொல்லும்.