எப்படிப் போட்டாலும் சிக்ஸர் அடிப்போம்.. அசராமல் பேசும் தமிழிசை!
ஆர்.கே.நகரில் எந்த வழியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாலும் அதனை தடுக்க பாஜக போராடும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆர்கே.நகரில் எந்த வழியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாலும் அதனை தடுக்க பாஜக போராடும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இந்த தேர்தல் முடிவு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் முடிவாக இருக்கும் என்றும் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
ஆர்கே.நகர் தொகுதிக்கு வரும் 12ஆம் தேரி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக, ஓபிஎஸ் அணியின் அதிமுக புரட்சி தலைவி அம்மா, சசிகலா தரப்பின் அதிமுக அம்மா, தேமுதிக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்றன.
இதற்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அனைத்துக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் பாஜக சார்பில் போட்டியிடும் இசையமைப்பாளர் கங்கை அமரனை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது,
பணத்தை நம்பிதான் திராவிடக்கட்சிகள்
ஆர்.கே.நகர் தொகுதியில் பணம் கொடுத்து தான் ஜெயிக்க முடியும் என்ற எண்ணத்தில் திராவிட கட்சிகள் இருக்கின்றன. கோவிலில் வைத்து பணம் கொடுக்க முயற்சித்ததாகவும், 7 லட்சம் ரூபாய் பணம் பிடிபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்
எந்த வகையிலும் முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தேர்தல் அதிகாரிகள் அனுமதிக்க கூடாது. ஓட்டுக்கு பணம் கொடுப்பது முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல் படுத்த வேண்டும்.
எப்படி கொடுத்தாலும் தடுப்போம்
எந்த வழியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாலும் அதை தடுப்பதற்கு பா.ஜனதா போராடும். வாக்காளர்களுக்கு எப்படி பணம்கொடுத்தாலும் அதனை பாஜக தடுக்கும். நிச்சயமாக இந்த தேர்தல் முடிவு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் முடிவாக அமையும் என்பதில் முழு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார்.
சாதகமாக்கிக்கொள்ள மும்முரம்
அதிமுகவின் பாரம்பரிய சின்னமா இரட்டை இலை முடக்கப்பட்டுள்ளதால் அதனை சாதமாக்கி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் பாஜக எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. இதற்காக பாஜகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.