அரசு வேலை கோரும் கண் பார்வையற்ற பட்டதாரி
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த பட்டதாரி மாணவர் ஆனந்த் என்பவர் தனது பெற்றோருடன் மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்து தனது குடும்ப நிலையைக் கருதி தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதுதொடர்பாக அவர் கொடுத்த மனுவில், எனது தந்தை பெரிய இசக்கி கூலிவேலை செய்து வருகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த நான் 9ம் வகுப்பு படித்த வேளையில் திடீரென சர்க்கரை நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டேன்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த காரணத்தினால் என்னால் அதற்குரிய மருத்துவ சிகிச்சைகளை முறையாக மேற்கொள்ள இயலவில்லை. இதன் காரணமாக நான் எனது கண்பார்வையை இழந்து பாதிக்கப்பட்டேன். இருந்தபோதும் எனது தாயார் உதவியுடன் படித்த நான் பிளஸ்டூ தேர்வில் கண் பார்வையற்றவர்களுக்கான பிரிவில் 1047 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தேன்.
தற்போது எம்.காம்., பி.எட் முடித்துள்ளேன். இதிலும் நான் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளேன். எனது குடும்ப சூழ்நிலை கருதியும், வருங்கால வாழ்வை கருத்தில் கொண்டும் எனக்கு கருணை அடிப்படையில் தமிழக அரசானது அரசுப்பணி வழங்கிட தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்திடவேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.
ஒன் இந்தியாவின் உதவியுடன் கல்லூரிப் படிப்பை முடித்தவர்
கடந்த 2008ம் ஆண்டு ஆனந்த், தனது கல்லூரிப் படிப்பின்போது வறுமையில் வாடியது குறித்து ஒன்இந்தியா தமிழ் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டு அவருக்கு பெரிய அளவில் உதவிகள் கிடைத்தன. அதைக் கொண்டுதான் ஆனந்த் தனது கல்லூரிப் படிப்பை நல்லபடியாக முடித்தார் என்பது நினைவிருக்கலாம்.