சேவை வரி உயர்வு எதிரொலி- குமரியில் ஜூன் 1 முதல் படகுக் கட்டணம் உயர்வு
குமரி: கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்ல ஜூன் 1 ஆம் தேதிமுதல் படகுக் கட்டணம் உயர்கிறது.
கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டுச் செல்கின்றனர்.
இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் எம்.எல்.குகன், எம்.எல்.பொதிகை, எம்.எஸ்.விவேகானந்தா ஆகிய மூன்று படகுகளை இயக்கி வருகிறது. இப்படகு சேவை காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை இயக்கப்படுகிறது.
தற்போது சேவை வரியுடன் சேர்த்து பெரியவர்களுக்கு ரூபாய் 34, மாணவர்களுக்கு ரூபாய் 17, வரிசையில் நிற்காமல் செல்ல சிறப்புக் கட்டணமாக ரூபாய் 169 வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசு சேவை வரியை 12.36 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதனால் படகுக் கட்டணம் வருகிற ஜூன் 1ஆம் தேதிமுதல் உயர்த்தப்படுகிறது.
அதன்படி, இனி பெரியவர்களுக்கு ரூபாய் 35, மாணவர்களுக்கு ரூபாய் 18, சிறப்புக் கட்டணமாக ரூபாய் 171 என உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.