படகு பழுதால் நடுக்கடலில் தத்தளித்து வரும் குமரி மீனவர்கள்: தேடும் பணி தீவிரம்
நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே நடுக்கடலில் படகு என்ஜின் பழுதானதால் 3 மீனவர்கள் தத்தளித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களை மீட்க சக மீனவர்கள் மற்றும் கடலோர காவல்படையினர் விரைந்துள்ளனர்.
கன்னியாகுமரி, வாவத்துறையைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு சொந்தமான படகில் அதிகாலை நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சிறில், செல்லத்துரை, ஜெரோம் ஆகியோர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். கரையில் இருந்து சுமார் 7 நாட்டிக்கல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது படகில் உள்ள என்ஜின் திடீரென பழுதானது. இதனால் படகை ஓட்ட முடியாமல் மீனவர்கள் தடுமாறினர். கரைக்கு வர முடியாமல் அவர்கள் நடுக்கடலிலேயே தத்தளித்தனர். இந்த தகவலை மீனவர்கள் கரையில் உள்ள உறவினர்களுக்கு செல்போன் மூலம் தெரிவித்தனர். உடனே அவர்கள் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தெரிவித்து நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்கும்படி கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயஜோஸ், சப்-இன்ஸ்பெக்டர் பால்சன் ஞானதாஸ் மற்றும் போலீசார் அதிநவீன ரோந்து படகில் சென்று மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் எவ்வளவு தொலைவில் உள்ளனர், எந்த பகுதியில் படகு பழுதாகி நிற்கின்றது என அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.