வியாபாரி வீட்டில் நாட்டு வெடிகுண்டு கண்டுபிடிப்பு: போலீசார் தீவிர விசாரணை
நெல்லை: நெல்லை அருகே வியாபாரி வீட்டில் நாட்டு வெடிகுண்டு சிக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் அருகே உள்ள சன்னியாசி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து வீரபாண்டியன். டவுன் நயினார்குளம் மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வருகிறார். அவரது வீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதனால் அவர் வீட்டின் பின்பகுதியில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்.
வீட்டின் முகப்பில் கார் செட் உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காரை செட்டில் விட்டுள்ளார் முத்து வீரபாண்டியன். அந்த மாலை காரை எடுக்க சென்றபோது காருக்கு அடியில் துணி கிடந்ததால் அதை அகற்றினார். அதன் அருகே உருண்டை வடிவில் ரப்பர் பேண்ட் சுற்றிய நிலையில் ஒரு மர்ம பொருளும் கிடந்ததால் அதை காலால் தள்ளினார்.
அந்த மர்ம பொருள் வெடிகுண்டு போல காட்சி அளித்ததால் அதிர்ச்சி அடைந்த அவர் நெல்லை பாலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் ரகுபதி ராஜா, சப் இன்ஸ்பெக்டர் கந்தன், வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பிரிவு இன்ஸ்பெக்டர் குலசேகரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து வீட்டில் சோதனை நடத்தினர்.
அதில் ரப்பர் பேண்ட் சுற்றப்பட்டு கிடந்தது நாட்டு வெடிகுண்டு என கண்டறியப்பட்டது. இதையடுத்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு வீடு முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் வேறு குண்டுகள் சிக்கவில்லை. நாட்டு வெடிகுண்டை செயல் இழக்கச் செய்ய வண்ணார்பேட்டை தாமிரபரணி கரையோரம் கொண்டு சென்றனர். அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் ராமையன்பட்டி காட்டு பகுதிக்கு கொண்டு சென்று செயல் இழக்கச் செய்தனர்.
பின்னர் அதை பரிசோதனை செய்ததில் அதில் ரசாயன பொருட்கள் இல்லை என தெரிய வந்தது. வெடிகுண்டை வைத்து சென்றது யார், ஏதற்காக வைத்தார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.