பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: தி.நகரில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடி மருந்துகளுடன் கூடிய பார்சல் மற்றும் மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக காவல்துறையில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு தடைவிதித்துள்ளது. தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட தலைவர்கள் இதற்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.
புகாரையடுத்து மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பாஜக மாநில தலைவர் தமிழிசைக்கு அடிக்கடி கொலை மிரட்டல் கடிதங்கள், தொலைபேசிகள் வந்து கொண்டிருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்த கடிதத்தில், மாட்டிறைச்சிக்கு எதிராக பேசுவதை தமிழிசை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக மாம்பலம் போலீஸார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு மீண்டும் மிரட்டல் கடிதம் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.