அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!
சென்னை: அதிமுக அவைத்தலைவர் மதுசூதன் வீட்டில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன். இவர் மனைவி ஜீவா உள்ளிட்ட குடும்பத்தாருடன் சென்னை வண்ணாரப்பேட்டை கோதண்டராமன் தெருவில் வசித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு வரை தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்த மதுசூதனன், அதன் பிறகு படுக்கைக்கு சென்றார்.
இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் அவரது வீட்டின் பால்கனி மீது மர்ம நபர்கள் பெட்ரோல் நிரப்பிய 2 பாட்டில்கள் வீசியுள்ளனர். சத்தம் கேட்டு மதுசூதனன் வந்து பார்த்தபோது, அங்கு, சில கற்களும் கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து இன்று மாலை தண்டையார்பேட்டை போலீசில் ஜீவா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார், மதுசூதனின் வீட்டுக்கு சென்று பார்வையிட்டனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்டது உறுதியானது. பின்னர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக புதிய நிர்வாகிகள் தேர்வில் அதிருப்தி அடைந்த யாராவது இதை செய்திருப்பார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.