சட்டசபைத் தேர்தல்... "பூத் ஸ்லிப்" விநியோகம் தொடங்கியது!
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் பூத் ஸ்லிப் விநியோகம் தொடங்கியுள்ளது. வாக்குச் சாவடி அலுவலர்களே நேரடியாக வீடு தேடி வந்து வாக்காளர்களிடம் பூத் ஸ்லிப்பை வழங்கி வருகிறார்கள்.
தமிழகத்தில் மே 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அக்னி நட்சத்திர வெயிலையும் பொருட்படுத்தாமல் தலைவர்கள், வேட்பாளர்கள், கட்சியினர் அனல் பறக்க பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் வாக்குப்பதிவை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் மும்முரமாக செய்து வருகிறது. ஓட்டுப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் மற்றும் புகைப்படங்களை பொருத்தும் பணி நேற்று தொடங்கியது. வேட்பாளர்களின் பெயர், சின்னத்துடன், இந்த தடவை முதல் முறையாக வேட்பாளர்களின் புகைப்படங்கள் ஒட்டப்படுகின்றன.
மேலும், வாக்காளர்களுக்கான பூத் ஸ்லிப் வழங்குவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் பூத் ஸ்லிப் வழங்கப்படுகிறது. இவற்றை வாக்குச்சாவடி அலுவலர்களே, வீடு, வீடாக சென்று வழங்குவார்கள். வாக்காளர்கள் அதனை பெற்றுக்கொண்டு ஒப்புகை அளிக்க வேண்டும்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வாக்குச் சாவடி அலுவலர்கள் பூத் ஸ்லிப் வழங்கும் பணியை இன்று தொடங்கியுள்ள்ளனர்.
அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலரால் கால அட்டவணை தயாரிக்கப்பட்டு அதன்படி ஸ்லிப் வினியோகிக்கப்படும். கால அட்டவணை தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு தெரிவிக்கப்படும். இந்த பணிகளை அரசியல் கட்சிகளின் முகவர்கள் பார்வையிடலாம். இந்த பணிகளை ஆய்வு செய்ய மேல்நிலை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பான புகார்களை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள் ஆகியோருக்கு அனுப்பலாம்.
புகார்களின் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த பணிக்கான சேவை மையங்கள் ஆங்காங்கே அமைக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.