ஆந்திரா போலீசின் மிருகத்தனம்..13 வயது சிறுவனை 5 நாட்களாக சங்கிலியில் கட்டி வைத்து கொடூர சித்ரவதை!
சென்னை: ஆந்திரா போலீசார் 13 வயது சிறுவனை சங்கிலியால் கட்டி வைத்திருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
20 அப்பாவித் தமிழர்களை செம்மரம் வெட்டியதாக கூறி சுட்டுப் படுகொலை செய்தது தொடர்பாக ஆந்திரா போலீசார் மீது ஹைதராபாத் நீதிமன்ற உத்தரவின் பேரில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் செயின் பறித்ததாக 13-வயது சிறுவனை 5 நாட்களாக காவல் நிலையத்திலேயே சங்கிலியால் பிணைத்து ஜன்னலில் கட்டிவைக்கப்பட்டிருக்கும் காட்சியுடன் வீடியோ வெளியாகி இருக்கிறது. வீடியோ காட்சியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இது குறித்து பிரகாசம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீகாந்த் கூறுகையில், சிறுவன் பிடிபட்ட சம்பவத்தன்று காவல்நிலையத்தில் ஒரே ஒரு காவலர் மட்டுமே இருந்துள்ளார். அவர் சாப்பிடுவதற்கு வெளியே செல்லும் போது சிறுவன் தப்பி ஓடிவிடாமல் இருப்பதற்காகவே சங்கிலியால் கட்டி போட்டதாகவும் இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறினார்.
கடந்த மாதம் தெலுங்கானாவில் 13 வயது சிறுவன் ரூ300 திருடியதற்காக இதேபோல் சங்கிலியால் கட்டி போலீசார் சித்ரவதை செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.