பழனி அரசு மருத்துவமனையில் ஒன்றரை வயது ஆண் குழந்தை அபேஸ்.. மர்ம கும்பலுக்கு போலீசார் வலை வீச்சு
பழனி அரசு மருத்துவமனையில் ஒன்றரை வயது ஆண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது. மர்ம கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
பழனி: அரசு மருத்துவமனைகளில் இருந்து குழந்தைகள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இன்று பழனி அரசு மருத்துவமனையில் இருந்து ஆண் குழந்தை ஒன்று கடத்தப்பட்டுள்ளது.
பழனியை அடுத்த அ. கலைபுத்தூர் கிராமத்தில் இருந்து பிரேம்குமார் என்ற ஒன்றரை வயது குழந்தையை எடுத்துக் கொண்டு தாய் தேவி பழனி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த தேவியின் குழந்தை பிரேம்குமாரை அடையாளம் தெரிய மர்ம கும்பல் ஒன்று கடத்திச் சென்றுள்ளது.
பதறிப் போன தாய் தேவி இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து, கடத்தியது யார் என போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக டிஎஸ்பி வெங்கட்ராமன் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.
அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் திருடு போவதும் கடத்தப்படுவதும் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம் கூட சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து ஆண் குழந்தை ஒன்று கடத்தப்பட்டு பின்னர் மீட்கப்பட்டது. தொடர்ந்து குழந்தை கடத்தல்கள் நடந்து வருவதால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.