தாய் தந்தையருக்கு குழந்தைகள் பாதபூஜை… பெற்றோர்கள் நெகிழ்ச்சி
தென்காசியில் தாய் தந்தையருக்கு சிறுவர் சிறுமியர் பாத பூஜை செய்து வழிபட்டனர். இதனால் பெற்றோர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
தென்காசி: மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகியோர் பாதம் தொட்டு வணங்கி அவர்களின் பூரண ஆசிகளையும், அனுக்கிரகத்தையும் பெறுவது குழந்தைகளுக்கு கடமை, பாக்கியம்.
இது இந்தியாவின் கலாச்சாரமாக இன்றும் போற்றப்பாட்டு வருகிறது.நெல்லை மாவட்டம் தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தின் வளாகத்தில் ஐந்தருவி ஸ்ரீ விவேகானந்தர் ஆசிரமம், ஸ்ரீ சாரதா ஆசிரமம் இணைந்து தாய் தந்தையர்களுக்கு குழந்தைகள் பாத பூஜை செய்து வழிப்படும் இந்துக்களின் பாரம்பரியம் காக்கும் திருவிழா இன்று நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் தாய், தந்தையரின் பாதங்களை கழுவி சந்தனம், குங்குமம் வைத்து, மலர்களால் அபிஷேகம் செய்து கற்பூரம் காட்டி பூஜை செய்தனர்.
பாத பூஜை
சிறுவர்கள், சிறுமிகள், திருமணமான ஆண்கள், பெண்கள் என நூற்றுக் கணக்கானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்தனர். அப்போது, பக்திப் பாடல்களையும் அவர்கள் பாடிக் கொண்டே பூஜை செய்ததால் பெற்றோர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
சிறுவர், சிறுமியர்..
பெற்றோருக்கு குழந்தைகள் மற்றும் திருமணமான பெரியவர்கள் குடும்பத்தோடு பூஜை செய்வதைக் காண ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து நெகிழ்ச்சியோடு பார்வையிட்டு சென்றனர்.
ஆசிர ஏற்பாடு
ஆசிரம நிர்வாகிகள் சுவாமி.அகிலானந்தா, யதீஸ்வரி.ஆத்மபிரியா அம்பா ஆகியோர் முன்னின்று இந்த நிகழ்ச்சியை நடத்தினர். இதில் ஏராளமான பொதுமக்கள் தங்களது குழந்தைக்ளோடு கலந்துக் கொண்டு பாதபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அடுத்த ஆண்டும்..
ஆங்காங்கே இதுபோன்று பெற்றோர்களுக்கு பூஜை நடத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதால் அடுத்த ஆண்டும் இதே போன்று நிகழ்ச்சி நடத்தப்படும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.