லஞ்சமா, கைதா, சம்மனா? எனக்கு எதுவுமே தெரியாதே: தம்பிதுரை
சென்னை: தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக டிடிவி தினகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டதா என்பது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற தேர்தல் ஆணையத்திற்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுத்ததாக டிடிவி தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக இடைத்தரகர் ஒருவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று இரண்டு முறை சந்தித்து பேசினார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பொதுவான விஷயங்கள் குறித்து முதல்வரிடம் பேசினேன். வேறு எந்த விஷயம் பற்றியும் பேசவில்லை. தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லியில் ஒருவர் கைதாகியுள்ளதாக கூறப்படுவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
அதே போன்று லஞ்ச விவகாரத்தில் டிடிவி தினகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டதா என்பது பற்றி தனக்கு எதுவும் தெரியாது. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம் என்றார்.
இந்த பரபரப்பான சூழலில் தம்பிதுரை டெல்லி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.