லண்டனில் களைகட்டும் தீபாவளி… பிரதமர் தெரசா மே இந்தியர்களுக்கு விருந்து
பிரிட்டன் பிரதமர் தெரசா மே, இந்தியர்களை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்து தீபாவளியை கொண்டாடினார்.
சென்னை: அண்மையில் பிரிட்டனின் பிரதமராக பதவி ஏற்ற தெரசா மே தீபாவளிக் பண்டிகையை முன்னிட்டு, அங்கு வாழும் இந்திய வம்சாவழியினர், மற்றும் இந்தியாவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு விருந்து வழங்கி தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்தியாவிற்கும், பிரிட்டனுக்கும் உள்ள உறவு பொருளாதார ரீதியிலும், கலாச்சார ரீதியிலும் மிக முக்கியமானது. மேலும், அங்கு அதிக அளவில் இந்திய வம்சாவழியினர் வாழ்ந்து வருகின்றனர்.
எனவே, இந்தியாவில் பிரமாண்டமாக கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகைக்கு ஒவ்வொரு ஆண்டும் அந்நாட்டு அரசியும் பிரதமரும் தீபாவளி வாழ்த்துச் சொல்வது வழக்கம்.
இந்நிலையில், நேற்று அந்நாட்டின் பிரதமர் தெரசா மே தனது இல்லத்தில் இந்திய வம்சாவழியினர் மற்றும், முக்கிய இந்திய பிரமுகர்கள் என 150க்கும் மேற்பட்டவர்களை வரவழைத்து தீபாவளி விருந்து வழங்கினார்.
விருந்தில் கலந்து கொண்ட தெரசா மே, நூற்றுக்கணக்கான மொழிகளைப் பேசும் கோடிக்கணக்கான மக்கள் வாழும் இந்தியாவில் பல்வேறு மத நம்பிக்கைகளோடு வாழ்கிறார்கள் என்றாலும் தீபாவளிப் பண்டிகையை ஒற்றுமையாக கொண்டாடுகிறார்கள் என்று கூறி இந்தியர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
மேலும், இந்தியாவுக்கும், பிரிட்டனுக்கும் இடையிலான வர்த்தக உறவு மிக முக்கியமானது என்றும் அடுத்த மாதம் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை டெல்லியில் இருந்து பெங்களூர் வரை பயணம் செய்ய இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.
பிரிட்டனில் இந்திய வம்சாவழியினர் முக்கிய இடம் வகித்து வருகின்றனர். அவர்களோடு தீபாவளி பண்டிகை கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரசா மே கூறினார்.