”நீ வயதில் பெரியவள், விலகிடு” - அண்ணனின் காதலியை தற்கொலைக்கு தூண்டிய தம்பிக்கு 10 ஆண்டு சிறை!
ஈரோடு: ஈரோட்டில் வயதைக் காரணம் காட்டி அண்ணனின் காதலியை தற்கொலைக்கு தூண்டிய தம்பிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு நகரிலுள்ள சாஸ்திரி நகர் கவிபாரதி வீதியை சேர்ந்தவர் ஜான் சாமுவேல். இவர் அங்குள்ள ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தில் போதகராக உள்ளார்.
இவர் மகள் மிக்கேல் ராஜாத்தி. இவர் ஈரோட்டில் உள்ள தனியார் பால்பண்ணையில் கேஷியராக பணியாற்றினார். இவருக்கும் அதே நிறுவனத்தில் பணியாற்றிய ஈரோடு மூலப்பாளையம் டெலிஃபோன் நகரை சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இதை அறிந்த மிக்கேல் ராஜாத்தியின் பெற்றோர், அவரை வால்பாறையில் உள்ள ஒரு கிறித்துவ ஆசிரமத்தில் சேர்த்தனர். அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறிய அவர் ஈரோடு அருகிலுள்ள சின்னியம்பாளையத்தில் உள்ள பிரபாகரனின் பாட்டி கந்தம்மாள் என்பவரின் வீட்டில் தங்கியுள்ளார்.
அங்கு, மிக்கேல் ராஜாத்தியுடன் பிரபாகரன் ஐந்து நாள் தங்கினார். அப்போது, பிரபாகரனின் தம்பி தினகரன் என்பவர் அங்கு வந்து என்னுடைய அண்ணனை விட நீ வயதில் மூத்தவள். அதனால் உன்னை என் அண்ணனுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என தற்கொலைக்கு தூண்டும் விதமாக பேசியுள்ளார்.
இதனால் விரக்தி அடைந்த மிக்கேல் ராஜாத்தி கடந்த 2013 ஏப்ரல் 20 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மொடக்குறிச்சி போலீஸார் தினகரனை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையை மேற்கொண்ட நீதிபதி திருநாவுக்கரசு தினகரனுக்கு 10 ஆண்டு சிறை, 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.