பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு ரோமிங், ப்ரீ..ப்ரீ..ப்ரீ!
சென்னை: இம்மாதம் 15ம் தேதி முதல் நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் இலவச ரோமிங்கில் அழைப்புகளை மேற்கொள்ளலாம் என மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: ஜூன் 15ம் தேதி முதல் நாடு முழுவதும் பிஎஸ்என்எல் பயன்படுத்துவோர் செல்போன் அழைப்புகளுக்கு ரோமிங் கட்டணம் வசூலிக்கப்படாது. இன்கம்மிங், அவுட்கோயிங், மெசேஜ் உள்ளிட்ட அனைத்துக்கும் வழக்கமான கட்டணம்தான் வசூலிக்கப்படும்.
நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களில் வை-பை இணையதள வசதியளிக்க பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. இவ்வாண்டில் 2500 வை-பை ஹாட்ஸ்பாட்டுகள் தொடங்கப்படும்.
டெல்லி மற்றும் மும்பை போன்ற முக்கிய நகரங்களில் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை லேண்ட்லைனில் இருந்து எந்த நெட்வொர்க்குக்கும் கட்டணமற்ற அழைப்புகளை மேற்கொள்ளலாம்.
ஊரக பகுதிகளில் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களாக இணைபவர்களின் எண்ணிக்கை கடந்த 11 மாதங்களில் 4.5 சதவீதம் அதிகரித்துள்ளனர். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். தனியார் தொலைதொடர்பு துறையின் லாபிக்கு பணியாமல், பிஎஸ்என்எல் எடுத்துள்ள இந்த முடிவால், தனியார் நிறுவனங்களும் ரோமிங் கட்டணத்தை குறைக்கவோ அல்லது கட்டணத்தை ரத்து செய்யவோ வாய்ப்பு உருவாகியுள்ளது.