அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கி வளமான புதுவையை உருவாக்குவோம்: ஆளுநர் உரையில் கிரண்பேடி
புதுச்சேரி: புதுச்சேரி யூனியனை குற்றமில்லா பிரதேசமாக உருவாக்குவோம் என்று துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ்- திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்று நடக்கும் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இது ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது.
முன்னதாக, ராஜ்நிவாசில் இருந்து வந்த துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு சட்டசபை வளாகத்தில் போலீஸ் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து சபாநாயகர் வைத்திலிங்கம், செயலர் வின்சென்ட் ராயர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து, 9.30 மணியளவில் தனது உரையை ஆங்கிலத்தில் வசித்தார் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி.
அப்போது அதிமுக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தை 20 நாட்கள் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கையில் பதாகைகள் ஏந்தி தொடர்ந்து கோஷமிட்டுக்கொண்டே இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் கிரண்பேடி தனது உரையை தொடர்ந்து வாசித்து 45 நிமிடங்களில் நிறைவு செய்தார்.
துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உரையில் கூறியதாவது: காவல் நிலையங்களை ஒருங்கிணைத்து குற்றங்களை கண்டு பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புதுச்சேரி வளர்ச்சிக்கு சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்படுவது அவசியம். புதுச்சேரியை வளமானதாகவும், தூய்மையானதாகவும் வைத்துக் கொள்வதே எனது லட்சியம்.
குற்றமில்லா புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை உருவாக்க தனி கவனம் செலுத்த வேண்டும். ரோந்து, கண்காணிப்பு, புலனாய்வு,காவல்துறையை நவீனப்படுத்துவதன் மூலம் இதனை சாதிக்க முடியும். பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு உணர்வை வழங்கி வளமான புதுவையை நனவாக்குவோம் என்று கூறினார்.