4 நாள் மட்டுமே சட்டசபை கூட்டம்… மானியக்கோரிக்கை விவாதம் எப்போ?
சென்னை: பட்ஜெட்டிற்கு பின் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ள தமிழக சட்டசபை மீண்டும் மார்ச் 27ம் தேதி துவங்கும் எனவும், மார்ச் 27 முதல் மார்ச் 31 வரை 4 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும் எனவும் சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2015-16ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தொடர்ந்து சட்டசபை ஒத்திவைக்கப்படுவதாகவும், அவை மீண்டும் மார்ச் 27ம் தேதி காலை 10 மணிக்கு கூடும் எனவும் சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
இதன்பின்னர் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் 4 நாட்கள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
வெள்ளி முதல் செவ்வாய் வரை மட்டுமே சட்டசபை கூட்டம் நடைபெறும் எனவும்,மானியக்கோரிக்கை மீதான விவாதம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே பட்ஜெட் உரையை புறக்கணித்த திமுக, போதிய நாட்கள் சட்டசபை கூட்டத்தை நடத்தவில்லை என்று எதிர்ப்பு தெரிவித்து அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் இருந்தும் வெளிநடப்பு செய்தது.
சட்டசபை குளிர்கால கூட்டத் தொடர் மூன்று நாட்கள் மட்டுமே நடைபெற்றது. இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடர் 4 நாட்கள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.