சசிகலா குரூப்புக்கு "பில்டிங்" ஸ்டிராங்.. "பேஸ்மென்ட்" ரொம்ப வீக்...எப்படி தெரியுமா?
சசிகலா குரூப்புக்கு பில்டிங் ஸ்டிராங், பேஸ்மென்ட் வீக் என்ற நிலையில்தான் உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: சசிகலா என்னதான் எம்.எல்.ஏக்களை மடக்கி வைத்திருந்தாலும் அவர்களுக்கு கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மட்டத்தில் மிகப் பெரிய அளவில் எதிர்ப்புகள் நிலவுவதாக தகவல்கள் கூறுகின்றன. அதைப் பற்றி சசிகலா தரப்பு கவலையும் படவில்லையாம்.
கவலைப்படாமல் இப்படி மெத்தனமாக அவர்கள் இருப்பதற்கு முக்கியக் காரணம், முதலில் பதவியைப் பிடிப்போம். அதன் பிறகு தானாக வந்து சேருவார்கள். இவர்களைப் பற்றி நமக்குத் தெரியாதா என்ற எண்ணம்தான் என்று கூறுகிறார்கள். இதன் காரணமாகவே கட்சி நிர்வாகிகள் குறித்தோ, தொண்டர்கள் குறித்தோ அவர்கள் கவலைப்படவில்லையாம்.
அதை விட முக்கியமாக தொண்டர்களாக நமக்கு முக்கியம், நிர்வாகிகளா நமக்கு முக்கியம், ஆட்சி, அதிகாரம் இவைதான் மிக மிக முக்கியம் என்ற கணக்கில்தான் சசிகலா தரப்பு தைரியமாக நடமாடி வருகிறதாம்.
பல மாவட்டங்களில் ஆள் இல்லை
பல மாவட்டங்களில் சசிகலா தரப்புக்கு சுத்தமாக ஆதரவு இல்லையாம். பல மாவட்ட நி்ர்வாகிகள் ஒன்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பக்கம் சேர்ந்துள்ளனர் அல்லது அமைதியாக ஒதுங்கி விட்டனராம்.
முடிவுக்காக காத்திருப்பு
பலர் என்னதான் முடிவு வருகிறது என்று பார்ப்போம். அதற்கேற்ப நாம் முடிவு செய்வோம் என்று கருதி அமைதியாக காத்திருக்கின்றனராம். யார் கை கடைசியாக ஓங்குகிறதோ அந்தப் பக்கம் போகும் முடிவில் இவர்கள் உள்ளனராம்.
சசிகலா மீது எரிச்சல்
ஆனால் பெரும்பாலான கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் சசிகலா மீது பெரும் எரிச்சல் உள்ளதாகவே கூறப்படுகிறது. காரணம், ஜெயலலிதா இறந்து குறுகிய காலத்திலேயே இவர் பதவிகளைத் தேடி ஓடியதுதான். அதை அவர்கள் ரசிக்கவில்லை.
நமக்கு இதுவா முக்கியம்
நிலைமை இப்படி இருக்க சசிகலா தரப்பு இதைப் பற்றிக் கவலையே படவில்லை. முதலில் பதவியைப் பிடிப்போம். பிறகு மற்றதைப் பார்த்துக் கொள்வோம் என்று திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.
நாலரை வருடம்தான் கணக்கு
நிச்சயம் மக்கள் ஆதரவு சுத்தமாக கிடைக்கப் போவதில்லை என்பது சசிகலா தரப்புக்கு நன்றாகவே தெரியும். ஆனால் சுளையாக நாலரை வருடம் இருப்பதால் அதை முழுமையாக அனுபவித்து விட வேண்டும், விட்டுக் கொடுத்து விடக் கூடாது என்பதில் அவர்கள் தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளனராம்.