புதுக்கோட்டை அருகே அமைச்சர் நடத்திய அவசர ஜல்லிக்கட்டில் விபரீதம்.. மாடு முட்டி 2 வீரர்கள் பலி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசல் கிராமத்தில் அவசரமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டின் போது மாடு முட்டி 2 இளைஞர்கள் பலியாகியுள்ளார்.
ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. எனவே இன்றே ஜல்லிக்கட்டு நடத்த, அரசு அவசரம் காட்டியது. மக்களோ நிரந்தர சட்டம் கேட்டு போராடுகிறார்கள். நாளை சட்டசபை கூட்டத்தொடரில் நிரந்தர சட்டம் இயற்றப்படும் என முதல்வர் பன்னீர்செல்வம் கூறியதை போராட்டக்காரர்கள் ஏற்கவில்லை.
ஆனாலும், ஆங்காங்கு அமைச்சர்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடக்கி வைத்தனர். முதல்வர் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு தொடங்கி வைப்பதாக இருந்த நிலையில் மக்கள் எதிர்ப்பால் அவர் சென்னை திரும்பினார்.
ஆனால், புதுக்கோட்டை மாவட்டம், ராப்பூசல் கிராமத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாட்டில், கல்வி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் முன்னிலையில் மக்களின் எதிர்ப்புக்கு நடுவேயும் அவசரமாக ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதனால் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த போட்டியின்போது மாடு முட்டியதில் மாடு பிடி வீரர்கள் ஜக்கம்பட்டியைச் சேர்ந்த மோகன் மற்றும் ராஜா ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுதவிர 90 பேருக்கு காயம் ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 30 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் போதிய ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். மருத்துவர்கள், அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் அளவுக்கான உபகரணங்கள் இருக்க வேண்டும். ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கரோ, 'மேலிடத்திற்கு' கணக்கு காட்டி நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் எதையும் ஆராயாமல் ஊர்மக்களை கட்டாயப்படுத்தி ஜல்லிக்கட்டு நடத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவசர சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்ற மிஞ்சிப்போனால் இன்னும் ஒருநாளே உள்ள நிலையிலும் கூட, அமைச்சர் இவ்வாறு அவசரப்பட்டு மக்களின் உயிரோடு விளையாடியது எந்த விதத்தில் நியாயம் என மக்கள் குமுறுகிறார்கள். இந்த உயிரிழப்பு சம்பவத்தால் அரசு மீது மக்கள் அதிருப்தியிலுள்ளனர். உரிய ஏற்பாட்டுடன் விளையாட்டு நடந்திருந்தால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும் என்று அவர்கள் பொறுமுகிறார்கள்.