"என் உடலை தயவுசெய்து எரித்து விடுங்கள்"... பாலியல் வன்கொடுமையின் கோரமுகம்!
சென்னை: வாழ்க்கையின் இயல்பு மாறி பிரச்சினைகளில் தத்தளிக்கும்போது மெல்லிய மனம் கொண்ட பெண்களின் முடிவு எப்போதுமே "தற்கொலை" என்பதுதான்.
பொதுவாகவே ஆண்கள் இதயத்தில் வலிமையானவர்கள், மூளையில் வலிமையற்றவர்களாம். ஆனால், பெண்களுக்கு மூளையின் வலிமை அளவிற்கு இதயமும், உடலும் வலிமையாக இருப்பதில்லை. அதனால்தான் எளிதில் ஏமாந்தும் போகின்றார்கள்... இறந்தும் போகிறார்கள்.
ஆனால், மலையாளத்தில் வெளிவந்துள்ள "பர்ன் மை பாடி" என்ற படமோ இனிமேல் சாவதற்குக் கூட பயம் கொள்ள வேண்டும் பெண்கள் என்ற பயத்தினை விதைத்துள்ளது.
தற்கொலை என்னும் முடிவு:
ஆழ்மன வலிகளும், சுற்றுப்புற பிரச்சினைகளுக்கும் தீர்வாக தெரியும் ஒரே ஆயுதம் "தற்கொலை" என்னும் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவு. அதுவும் பெண்கள்தான் அதிக அளவில் எப்போதும் தற்கொலை முடிவினை நாடுகின்றார்கள்.
பிரச்சினைகளே பரவாயில்லை:
வாழ்க்கையினையே புரட்டிப் போடுகின்ற பிரச்சனைகள் கூட இறந்துவிட்டால் முடிந்துவிடும் என்ற எண்ணம்தான் அதற்குக் காரணம். ஆனால், இப்படியெல்லாம் கூடவா நடக்கின்றது என்று வாழ்க்கையின் பிரச்சினைகளே பரவாயில்லை என்று பெண்களை யோசிக்க வைத்துள்ளது இக்குறும்படம்.
செவிலியின் பார்வையில்:
ஒரு மருத்துவமனை... அம்மருத்துவமனையில் வேலை பார்க்கின்ற செவிலிதான் படத்தின் கதாநாயகி. தன்னுடைய திருமணத்திற்காக மகிழ்ச்சியுடன் சக ஊழியர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க இரவுப் பணிக்கு வருகின்றார்.
டைரியின் பதிவுகள்:
அவர் பதட்டமாக வந்து தன்னுடைய மேசையில் அமர்கிறார் பத்திரிக்கைகளைப் போட்டுவிட்டு. வியர்த்து வழியும் முகத்துடன் அமரும் அப்பெண் திடீரென்று தன்னுடைய டைரியினை எடுத்து ஏதோ எழுத ஆரம்பிக்கின்றார். அவருடைய முகமாறுதல்கள் தற்கொலை செய்யப் போவது போலவே தோன்றும்.
விரியும் மனக்காட்சிகள்:
ஆனால், அவர் எழுதுவதோ "அன்புள்ள அப்பா, அம்மா... எப்போதும் போல இன்றும் நான் மகிழ்ச்சியுடனேயே இரவுப் பணிக்கு வந்தேன் நீங்கள் அடித்துக் கொடுத்திருந்த என் திருமண அழைப்பிதழை அனைவருக்கும் கொடுக்கப் போகும் சந்தோஷத்தில்... என்று எழுதும் போது பின்னால் காட்சிகள் விரியத் தொடங்குகின்றன.
விரசம் தொனிக்கும் ஆண்:
அழைப்பிதழ்களுடன் வருகின்ற அவர் ஒரு மருத்துவருக்கு பத்திரிக்கை கொடுக்கின்றார். அப்போது தூரத்தில் நிற்கும் அருண் என்கின்ற வார்டு பாய் ஒருவரைப் பார்க்கின்றார். அவருக்கும் பத்திரிக்கை கொடுக்கப் போகும்போது விரசமாக பேசுகின்றார் அவர்.
நஞ்சினால் உயிர் போகுமா?:
வேகமாக திரும்பி நடக்கும் அப்பெண், மார்ச்சுவரி பணியாளர் ஒருவருக்கு அழைப்பிதழ் கொடுக்கச் செல்லும்போது திடீரென்று ஒரே கூச்சல். என்னவென்று பார்த்தால் ஒரு நடிகை விஷம் குடித்து அம்மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.
மாமாவால் பாலியல் தொந்தரவு:
சென்று பார்க்கும்போது அவரை அங்கு அட்மிட் செய்த தோழி, இச்செவிலியின் தோழியின் தங்கை. அவரிடமிருந்து அந்நடிகை தன்னுடைய சொந்த மாமாவாலேயே பாலியல் தொந்தரவுக்கு ஆளானதால் தற்கொலை முடிவுக்கு வந்ததை அறிந்து உடைந்து போகின்றாள்.
இறந்து போகும் நடிகை:
அந் நடிகையோ இறந்து போய் விடுகின்றார். சோகத்துடன் தன்னுடைய செவிலியர் அறைக்கு திரும்பும் அப்பெண்ணிடம் மற்றொரு செவிலி யாருக்கும் அழைப்பிதழ் கொடுக்க மறந்துவிடாதே என்கின்றார். அப்போதுதான் மார்சுவரி ஊழியருக்கு பத்திரிக்கை கொடுக்காதது அப்பெண்ணுக்கு நியாபகம் வருகின்றது. உடனே பத்திரிக்கைகளை எடுத்துக் கொண்டு மார்ச்சுவரிக்கு செல்கின்றார்.
சே இப்படியும் மனிதர்களா?:
நிசப்தமாக இருக்கின்ற மார்ச்சுவரியில் ஊழியரைத் தேடும்போது அவருடைய குரல் மட்டும் கேட்கின்றது. முழுக் குடியில் இருக்கும் அவர் போனில் யாரிடமோ "இன்னைக்கு ராத்திரி செம அயிட்டம்" என்று பேசிக் கொண்டிருக்கின்றார். சந்தேகம் கொள்ளும் செவிலி வெளியில் சென்று ஜன்னல் வழியாக பார்க்கும்போது உடற்கூறு ஆய்விற்காக வைக்கப்பட்டிருக்கும் அந்நடிகையின் உடலை இழுத்து வந்து அதனுடன் பாலியல் வன்முறையில் ஈடுபடுகின்றார் அந்த மார்ச்சுவரி ஊழியர்.
அதிர்ச்சியின் உச்சகட்டம் இது:
அதிர்ச்சியில் உறைந்து போகும் அச்செவிலி அங்கிருந்து தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடி வருகின்றார். அப்போது அருண் எதிர்ப்பட்டு "என்னமா இந்த நேரத்தில் பத்திரிக்கை கொடுக்கப் போன போலருக்கு?" என்று இரட்டை அர்த்தத்துடன் கேட்க ஆவேசத்துடன் பளாரென்று அறைந்து விடுகின்றார் அச்செவிலி.
தயவு செய்து எரித்து விடுங்கள்:
அதன்பின்னர்தான் அந்த முதல் காட்சி... அப்போது அங்கு வரும் மற்றொரு செவிலி மணி ஆறாகிவிட்டது கிளம்பலாம் என்கின்றார். இருவரும் வெளியேறும் போது கதாநாயகி டைரியில் எழுதிய மீதி வாசகங்கள் அவர் மனதில் ஓடுகின்றன. "தன்னுடைய மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள அப்பெண் விஷம் குடித்து இறந்தும் அவரால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. அவருடைய ஆத்மா எங்கோ ஓரிடத்தில் அழுது கொண்டிருக்கும். ஒருவேளை ஏதேனும் ஒரு நிலையில் நான் இறந்துவிட்டால் என் உடலை உடனடியாக எரித்து விடுங்கள்" என்று எழுதி முடித்திருப்பார்.
செத்துட்டா எல்லாம் முடிஞ்சுடுமா?:
நடக்கும்போதே அவருடைய தோழி, "பேசாம செத்துட்டா வாழ்க்கையோட எல்லா பிரச்சினைகளும் தீர்ந்திடும்ல" என்கிறார். அதற்கு அவர், "யார் சொன்னா செத்துட்டா எல்லாம் தீர்ந்துடும்னு?" என்று கேட்பதுடன் முடிவடைகின்றது மனதை உலுக்கும் அக்குறும்படம்.
உங்கள் முதுகை பாருங்கள் முதலில்:
ஒரு பெண் இறந்துவிட்டால் அவரைப் பற்றி அழுக்கு மனம் கொண்டவர்கள் எப்படியெல்லாம் பேசுவார்கள் என்பதையும் படத்தில் காட்டியுள்ளார் இயக்குனர் ஆர்யன் கிருஷ்ண மேனன். எல்லோரையும் உலுக்கிப் போட்டு நிமிடத்தில் உயிரினைக் கொல்ல இயற்கையால் முடியும்.... ஆனால், அதற்குள் எத்தனை, எத்தனை ஆட்டம்? சதைத் தின்னும் நரப்பிறவியாக இல்லாமல் இனியேனும் திருந்துங்கள் "மனிதர்களாய்" !