நீதிமன்ற உத்தரவு.. நாகர்கோவிலில் 50 அரசு பேருந்துகள் ஜப்தி.. பயணிகள் அவதி
தனியார் நிறுவனத்துக்கு பாக்கி தொகை செலுத்தாக வழக்கில் 50 பேருந்துகளை ஜப்தி செய்ய நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகர்கோவில்: ரப்பர் தொழிற்சாலைக்கு வழங்க வேண்டிய பணத்தை வழங்கதாதால் 50 அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளை ஜப்தி செய்ய நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1991ம் ஆண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி கோட்டத்தில் அரசு பேருந்துகளுக்கு டயர் செய்ய ரப்பர் மோல்ட் வாங்கப்பட்டது. கேரள மாநிலத்தை சேர்ந்த ரைமான்ஸ் ரப்பர் கார்ப்பரேசன் என்ற தனியார் நிறுவனத்தில் இருந்து ரப்பர் மோல்ட் கொள்முதல் செய்ததில் ரூ.2 கோடியே 42 லட்சம் செலுத்த வேண்டியிருந்தது.
இந்நிலையில், இந்த தொகையை வழங்கக் கோரி தனியார் நிறுவனத்தின் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி சதிகுமார், தனியார் நிறுவனத்துக்கு போக்குவரத்துக்கழகம் உடனடியாக பணத்தை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஆனால், பணம் செலுத்தப்படாதாதால் அந்நிறுவனத்தினர் மீண்டும் நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சதிகுமார் 50 அரசு பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து நீதி மன்ற ஊழியர்கள் வடசேரி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த எட்டு பேருந்துகளை ஜப்தி செய்வதாக நோட்டீஸ்கள் ஒட்டி நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர். இதுவரை 10 அரசுப் பேருந்துகள் நீதிமன்ற ஊழியர்களால் ஜப்தி செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகளும் பேருந்து இல்லாமல் அவதிக்குள்ளாகினர்.