எல்லா பஸ்சும் எக்ஸ்பிரஸ்... மறைமுக பஸ்கட்டண உயர்வுக்கு பயணிகள் கொதிப்பு
பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மறைமுகமாக பஸ்கண்டனம் உயர்ந்துள்ளது. இதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை: வாட் வரி அதிகரிப்பினால் கடந்த வாரம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏற்பட்டது. இதனால் அரசு போக்குவரத்துக்கழகங்கள் நஷ்டத்தை ஈடுகட்ட மறைமுகமாக பேருந்துக்கட்டணத்தை உயர்த்தியுள்ளன. இதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பேருந்துகளில் குறைந்த கட்டணம் கொண்ட வெள்ளை போர்டு பேருந்துகளை குறைத்து விட்டு தற்போது மஞ்சள் போர்டு அதிகம் கொண்ட பேருந்துகளை இயக்குவதாக புகார் எழுந்துள்ளது.
பெரும்பாலான பேருந்துகள் கட்டணம் அதிகமுள்ள எக்ஸ்பிரஸ் பேருந்துகளாக இயக்கப்படுவதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால், நடுத்தர மக்கள், பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
கட்டணம் எவ்வளவு
தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளில் சாதாரண கட்டணம், விரைவு கட்டணம், டீலக்ஸ் கட்டணம் என 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. சாதாரண கட்டணம் குறைந்தபட்சம் ரூ.3, விரைவு கட்டணம் குறைந்தபட்சம் ரூ.5, டீலக்ஸ் குறைந்த கட்டணம் ரூ.7 என வசூலிக்கப்படும். இரவு நேரங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் 10 மணி முதல் காலை 5 மணிவரை இரு மடங்கு கட்டணமாக வசூலிக்கப்படும்.
ஏழைகள் பாதிப்பு
சென்னையில் ஏழை, நடுத்தர மக்கள் பயணம் செய்யும் வகையில் சாதாரண பேருந்துகள் மட்டும் சுமார் 1000 பேருந்துகள் இயக்கப்பட்டன. இவை படிப்படியாக குறைக்கப்பட்டு 750 பேருந்துகள் மட்டுமே ஓடுகின்றன. கடந்த வாரம் பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து, கடந்த 2 நாட்களில் மட்டும் சாதாரண பஸ்களின் எண்ணிக்கை திடீரென 120 பேருந்துகளாக குறைக்கப்பட்டன. மீதமுள்ள பேருந்துகள் அதிகம் கட்டணம் கொண்ட எக்ஸ்பிரஸ் பேருந்துகளாக மாற்றி மறைமுகமாக கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இது பயணிகடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாதாரண பேருந்துகள்
சாதாரண பேருந்துகள் அனைத்தையும், எக்ஸ்பிரஸ் பஸ்களாக மாற்றி, குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 என வசூலிக்கப்படுகிறது. இது பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உதாரணத்துக்கு மந்தைவெளி பணிமனையில் சாதாரண பஸ்கள் மட்டும் சுமார் 75 இயங்கியது. இதில் தற்போது, 65 பேருந்துகள் விரைவு பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளன.
மந்தைவெளி பணிமனையை பொருத்தவரை மந்தைவெளி முதல் சென்ட்ரல் வரை செல்லும் பேருந்துகள் அதிகளவில் இயக்கப்பட்டன. ஆனால், தற்போது, 4 பேருந்துகள் மட்டுமே சாதாரணமாக இயக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
எந்த வசதியில்லை
இதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் சாதாரண பஸ்கள் அனைத்தும் விரைவு பஸ்களாக மாற்றப்பட்டு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஸ்டிக்கரை தவிர இந்த பேருந்துகளில் எந்த மாற்றமும், வசதியும் செய்யப்படவில்லை என்பது பயணிகளின் குற்றச்சாட்டு.