சென்னையில் தொழிலதிபர் கொலை.. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது கொடூரம்!
சென்னை: சென்னையில் தொழிலதிபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மண்ணடி கிருஷ்ணன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் தொழில் அதிபர் அக்பர் (54). இரும்பு பொருட்களை விற்பனை செய்து வந்த அவர், நேற்றிரவு வழக்கம் போல தனது வீட்டில் தூங்கச் சென்றுள்ளார். இந்நிலையில், இன்று காலையில் நீண்ட நேரமாகியும் அவர் படுக்கையை விட்டு வெளியே வரவில்லை என கூறப்படுகிறது.
இதனால் வீட்டில் இருந்தவர்கள் அவர் அறைக்கு சென்று பார்த்தபோது, அக்பர் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொழில் அதிபர் அக்பர் வசித்து வந்த வீடு 3 மாடிகளை கொண்டது. இந்நிலையில், 3-வது மாடியில் வசித்து வந்த அக்பர் வீட்டிலேயே படுக்கை அறையில் கொலை செய்யப்பட்டிருப்பது மர்மமாக உள்ளது.
வீட்டில் கொள்ளை அடிக்க வந்த மர்ம நபர்கள் கொலை செய்தார்களா? அல்லது அக்பருக்கு தெரிந்த நபர்கள் அவரை கொலை செய்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.