அமைச்சர் விஜயபாஸ்கர் கொலை குற்றவாளி.. ஸ்டாலின் பகீர் பேட்டி
குட்காவுக்கு லஞ்சம் வாங்கி அமைச்சர் விஜயபாஸ்கர் கொலைக் குற்றவாளியாகிவிட்டார் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: குட்காவுக்கு லஞ்சம் வாங்கி அமைச்சர் விஜயபாஸ்கர் கொலைக் குற்றவாளியாகிவிட்டார் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். லஞ்சம் வாங்கியதை மறுத்து பேச முடியாது என்பதாலேயே சட்டசபையில் பேச தங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
குட்கா விற்பனையாளர்களிடம் கோடி கணக்கில் லஞ்சம் பெற்றுக்கொண்டு அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் குட்கா விற்பனையை அனுமதித்தாக நாளிதழ்களில் செய்தி வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இன்றைய சட்டசபை கூட்டத்தொடரின் போது இதுகுறித்து பேச திமுகவினர் அனுமதி கோரினர். ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதிக்காததால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
குட்கா விற்பனையாளரிடம் லஞ்சம்
இதைத்தொடர்ந்து சட்டசபைக்கு வெளியே எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தடை செய்யப்பட்ட போதைப்பொருள் குட்கா விற்பனையாளர்களிடம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பலகோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாக குற்றம்சாட்டினார்.
குற்றச்சாட்டை மறுக்க முடியாது
டி.ஜி.பி. ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோரும் லஞ்சம் பெற்றுள்ளனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார். தங்களின் குற்றச்சாட்டை மறுத்து பேச முடியாது என்பதற்காக தங்களை பேச அனுமதிக்கவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
கொலைக் குற்றவாளியாகிவிட்டார்..
தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருளை அனுமதித்ததன் மூலம் அமைச்சர் விஜயபாஸ்கர் கொலை குற்றவாளியாகிவிட்டார் என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். குட்கா விற்பனையாளர்களிடம் இருந்து விஜயபாஸ்கர் 40 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
சிக்கியுள்ள டைரி...
லஞ்சம் பெற்றமது தொடர்பாக வருமானவரித்து அதிகாரி கடிதம் எழுதியும் அதற்கு இதுவரை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில் அளிக்கவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து 89 கோடி ரூபாய் பணத்தை வருமான வரித்துறை கைப்பற்றியது சுட்டிக்காட்டிய ஸ்டாலின், லஞ்சம் பெற்றவர்கள் தொடர்பான பெயர் பட்டியல் அடங்கிய டைரியையும் வருமான வரித்துறை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தார்.