மக்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள்.. மீண்டும் அரசியலுக்கு வர மாட்டேன்.. இரோம் ஷர்மிளா உறுதி
மக்களுக்காக நெடுங்காலம் போராடிய தன்னை மக்கள் ஏமாற்றிவிட்டார்கள். எனவே, மீண்டும் அரசியலுக்கு வர மாட்டேன் என்று மணிப்பூர் போராளி இரோம் ஷர்மிளா திட்டவட்டமாக கூறியுள்ளார்.
கொடைக்கானல்; மணிப்பூர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் 16 ஆண்டுகள் ஆயுதப்படை சிறப்பு அதிகாரத்தை எதிர்த்து போராடிய இரோம் ஷர்மிளா. இதனைத் தொடர்ந்து அரசியலில் இருந்து முற்றிலும் ஒதுங்கியுள்ளார்.
இந்நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள கொடைக்கானலில் அவர் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார். அவர் தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில், அமைதியான அழகான சூழல் நிலவுவதால் கொடைக்கானலில் வசிக்க முடிவு செய்துள்ளேன். நிரந்தரமாக இங்கேயே தங்க முடிவெடுத்துள்ளேன்.
இன்றைய நிலையில் அரசியல் பற்றி குறிப்பாக எந்த திட்டமும் என்னிடம் இல்லை. நீதிக்கான போராட்டத்தை வாழ்நாள் முழுவதும் நடத்த உறுதி பூண்டுள்ளேன். அரசியல் நுழைவில் தமக்கு ஏற்பட்ட தோல்வி ஏமாற்றம் அளித்துள்ளது.
தமக்கு மக்கள் வாய்ப்பு அளிக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது. அதனால் அரசியலுக்கு மீண்டும் வரும் எண்ணம் துளியும் இல்லை. மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்புச் சட்டம் ஒரு நாள் நிச்சயம் ரத்தாகும் என்று இரோம் ஷர்மிளா நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், இன்னும் இரண்டு மாதங்களில் தான் காதலித்த டெஸ்மேண்ட் கவுடின்கோவை மணக்க உள்ளதாகவும் இரோம் ஷர்மிளா தெரிவித்துள்ளார்.