'அம்மா' நகரான ஆர்.கே. நகர் தொகுதி: பரபரக்கும் அதிமுகவினர்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதையொட்டி அந்த தொகுதி பரபரக்கிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பதால் சென்னை ஆர்.கே. நகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேல் தனது பதவியை கடந்த 17ம் தேதி ராஜினாமா செய்தார்.
இதையடுத்து வரும் ஜூன் மாதம் 27ம் தேதி ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் திமுக போட்டியிடப் போவது இல்லை என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஆர்.கே. நகர் தொகுதி பரபரப்பாக காணப்படுகிறது. திரும்பும் பக்கமெல்லாம் சுவர்களில் அம்மாவுக்கு வாக்களிக்குமாறு பல வண்ணங்களில் எழுதப்படுகின்றது. எங்கு சென்றாலும் அம்மாவின் போஸ்டர்களை பார்க்க முடிகிறது. மேலும் அதிமுகவினர் ஜெயலலிதாவை வெற்றி பெற வைக்காமல் ஓய்வது இல்லை என்ற முடிவோடு உள்ளனர்.
தேர்தல் நெருங்கும் வேளையில் ஆர்.கே.நகர் அம்மா நகராக காட்சியளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.