ஆர்.கே.நகரில் களமிறங்கவே தயக்கம் காட்டிய பாஜக... 2016ல் எப்படி ஆட்சியைப் பிடிக்கும்?
சென்னை: 2016 சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி... அப்படியே கூட்டணி அமைந்தாலும் தங்களின் தலைமையிலான கூட்டணியில்தான் தேர்தலை சந்திக்க வேண்டும்... புனித ஜார்ஜ் கோட்டையில் காவிக்கொடி பறக்கவேண்டும் என்றும் சபதம் எடுத்துள்ளனர் பாஜகவினர்.
பாஜகவின் ஆசை நிறைவேறுமா? கனவு பலிக்குமா? அதற்கான கட்டமைப்போ, வாக்கு வங்கியோ தமிழக பாஜகவிடம் இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும்.
ஸ்ரீரங்கம் தொகுதியில் பாஜகவிற்கு 10,000 வாக்குகள் இருப்பதாக கூறி இடைத்தேர்தலில் அதிமுகவை எதிர்த்து களமிறங்கியது பாஜக. ஆனால் பாஜக வேட்பாளர் பெற்ற வாக்குகளோ வெறும் 5015 மட்டுமே.
அதே நேரத்தில் அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி 1,51,561 வாக்குகள் பெற்றார். திமுகவின் ஆனந்த் 55,045 வாக்குகள் பெற்றார் அதே நேரத்தில் பாஜக 5,015 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட்டை பறிகொடுத்தது.
ஸ்ரீரங்கத்தில் பட்ட அனுபவத்தை நினைத்துதான் ஆர்.கே.நகரில் களமிறங்காமல் தவிர்த்து விட்டது. காரணம் கூட்டணி கட்சிகள் என்று பாஜக நம்பிக்கொண்டிருக்கும் தேமுதிக உள்ளிட்ட யாருமே கை கொடுக்காததுதான் காரணம்.
விலகிய பாஜக
யாருடைய தயவுமே இல்லாமல் நம்பி காலை விட்டு இரண்டு நம்பர்,மூன்று நம்பரில் ஓட்டு வாங்கி இமேஜை டேமேஜ் செய்து கொள்ளவேண்டுமா? என்று யோசித்தே பாஜக போட்டியிடுவதை தவிர்த்து விட்டது. தேமுதிக போட்டியிட்டால் ஆதரவு தருவோம் என்று நூல் விட்டும் பிடி கொடுக்கவில்லை விஜயகாந்த். விளைவு போட்டியில் இருந்து விலகிவிட்டது பாஜக. இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் விட்ட உதாருக்கு கொஞ்சமும் குறைவில்லை.
புண்ணாகியிருக்குமோ?
தொழிலாளர்களின் வாக்குகளை மட்டுமே நம்பி களமிறங்கிய கம்யூனிஸ்டுகள் 9,722 வாக்குகள் பெற்றனர். இது ஸ்ரீரங்கத்தில் பாஜக வாங்கிய வாக்குகளை விட அதிகம். எந்த பின்புலமும் இன்றி தனித்து நின்ற டிராபிக் ராமசாமி கூட 4,590 வாக்குகள் பெற்றார். ஆனால் ஒருவேளை பாஜக வேட்பாளரை நிறுத்தியிருந்தால் ஸ்ரீரங்கத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு ஏற்பட்ட கதிதான் பாஜகவிற்கு ஆர்.கே.நகரில் ஏற்பட்டிருக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். நோட்டோவுக்கு கிடைத்த வாக்குகள் கூட கிடைத்திருக்குமா என்பதே சந்தேகம் தான்.
வாக்கு வங்கி இருக்கா?
அமைச்சர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை ஆர்.கே.நகரில் களமிறங்கி வேலை செய்தாலும் அவரவர்களுக்கு இருக்கக் கூடிய வாக்கு வங்கிகள் எங்கும் போக வாய்ப்பே இல்லை என்பது தெரிந்த உண்மை. ஆனால் சென்னையின் ஆர்.கே.நகரில் தங்களுக்கான வாக்கு வங்கி எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை சோதிக்கவாவது பாஜக வேட்பாளரை களமிறக்கியிருக்கலாம்.
முதல்ல நில்லுங்க
ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதா ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 432 ஓட்டுக்களும் இ.கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி. மகேந்திரன் 9,722 ஓட்டுக்களும் பெற்றனர். ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 722 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ஜெயலலிதா. டிராபிக் ராமசாமி 4 ஆயிரத்து 590 ஓட்டு பெற்றார். ஆனால் இடைத்தேர்தலில் நிற்காமலேயே ஆர்.கே.நகரில் அநியாயம் நடந்து விட்டது என்று பாஜகவோ, காங்கிரஸ் கட்சியோ கூப்பாடு போடுவது நியாயமா என்றும் அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
முதல்ல நீங்க நில்லுங்க... அப்புறம் சொல்லுங்க... கோட்டையை பிடிப்போம் கொடியை பறக்க விடுவோம்னு...