தமிழக சட்டசபைத் தேர்தலில் மோடி அலையை எதிர்பார்க்கக்கூடாது: நிர்மலா சீதாராமன்
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் மோடி அலையை எதிர்பார்க்கக் கூடாது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சென்னை, மதுரை, ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
காலை சென்னை, சைதாப்பேட்டையில் தேர்தல் பேரணியில் பங்கேற்ற அவர், பின், மதுரை, மெகோ அரங்கில் மதியம் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். பின்ன்ர் அங்கிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் அவர், மாலை, 6:30 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
இதற்கிடையே, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் நிர்மலா சீதாராமன். அப்போது அவரிடம், ஜெயலலிதாவை நேரில் பார்க்க இயலவில்லை என்ற பாஜக அமைச்சரின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘நான் ஜெயலலிதாவை நேரில் சந்தித்திருக்கிறேன்' எனப் பதிலளித்தார்.
மேலும், தமிழக சட்டசபைத் தேர்தலில் மோடி அலை வீசுமா என்ற கேள்விக்கு, ‘கடந்த லோக்சபா தேர்தலிலும் மோடி அலையைத் தான் பேசினோம். இத்தேர்தலில் மோடி அலையை எதிர்பார்க்கக்கூடாது. இது மாநிலத் தேர்தல். எனவே மாநில தலைவர்களின் பலத்தைத் தான் பார்க்க வேண்டும். பிரதமர் மத்தியில் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார் ' என பதிலளித்தார்.
அதோடு, மத்திய மற்றும் தமிழக அரசுகள் இணைந்து செயல்பட்டதாலேயே, உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு, தமிழகத்தில் முதலீடுகள் வந்ததாக அவர் தெரிவித்தார்.